வங்கதேசத்துக்கு அடி கொடுத்த இந்தியா.. ஷேக் ஹசீனாவின் விசா அதிரடி நீட்டிப்பு.. பின்னணி இதுதான்
டாக்கா: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேச இடைக்கால அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளது. அதேபோல் ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட்டை வங்கதேசம் முடக்கி உள்ள நிலையில் அதற்கு பதிலடியாக மத்திய அரசு அவரது விசா காலத்தை நீட்டித்துள்ளது. இதன்மூலம் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை முற்றிலுமாக இந்தியா புறம்தள்ளி உள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டத்தை தொடங்கினர். இது வன்முறையானது. இந்த வன்முறையை தொடர்ந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் மிகவும் நட்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் தான் அவருக்கு நம் நாடு அடைக்கலம் கொடுத்தது. தற்போது ஷேக் ஹசீனா ரகசிய இடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான பாதுகாப்பை நம் நாடு வழங்கி வருகிறது.
ஷேக் ஹசீனா ராஜினாமாவை தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த அரசின் தலைவராக முகமது யூனுஷ் உள்ளார். இவர் நம் நாட்டுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. அங்குள்ள சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதோடு, கோவில் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானுடன் அவர் இணக்கமாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் ஆலோசகர்களாக உள்ளவர்கள் நம் நாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படி நம் நாட்டுடன் மோதல் போக்கை வங்கதேச இடைக்கால அரசு கடைப்பிடித்து வருகிறது. இதற்கிடையே நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா மீது அங்கு பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அவரது அரசுக்கு எதிராக எதிராக இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக வங்கதேச தலைநகர் டாக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் (ICT)30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு அவருக்கு கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டி ஷேக் ஹசீனாவை இந்தியா நாடு கடத்த வேண்டும். அவரை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த நாட்டின் இடைக்கால அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.
இதற்கிடையே தான் ஷேக் ஹசீனாவின் விசா காலத்தை மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது. இதன்மூலம் ஷேக் ஹசீனா இன்னும் கூடுதல் நாட்கள் நம் நாட்டில் தங்க முடியும். அதோடு இந்த விசா நீட்டிப்பு மூலம் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க முடியாது என்று இந்தியா மறைமுகமாக வங்கதேசத்துக்கு பதிலளித்துள்ளது.
முன்னதாக வங்கதேசத்திலிருந்து வெளியேறிய அந்நாட்டுப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மற்றும் 96 பேரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ததாக வங்கதேச இடைக்கால அரசு நேற்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே நம் நாடு அவரது விசா காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. இதன்மூலம் வங்கதேசத்துக்கு நம் நாடு பதிலடி கொடுக்கும் வகையில் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications