வெடிக்கும் ஏவுகணைகள்-எல்லை மீறும் விமானங்கள்! சீனாவால் அதிகரித்த போர் பதற்றம்.. ஆதரவுகோரிய தைவான்
தைபே: தைவானை அச்சுறுத்தும் வகையில் சீனா தொடர்ந்து எல்லை பகுதியில் போர்ப்பயிற்சி செய்து வரும் நிலையில் போர் பதற்ற நிலைமை அதிகரிப்பதைத் தடுக்க சர்வதேச அளவில் தைவான் அதிபர் சாய் இங் வென் ஆதரவு கோரியுள்ளார்.
சீனாவின் ஒருபகுதியாக இருந்த தைவான் உள்நாட்டு போரை தொடர்ந்து தனி நாடாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் சீனா இதனை ஒப்புக்கொள்ளவில்லை.
தைவான் என்பது சீனாவின் ஒரு அங்கமாக தான் உள்ளது என தொடர்ந்து சீனா கூறி வருகிறது. இதற்கு தைவான் செவி சாய்க்கவில்லை.
உக்ரைனை தொடர்ந்து தைவானை உசுப்பேத்தும் அமெரிக்கா; சீனா தொடங்கிய ஏவுகணை தாக்குதல் பயிற்சி
போர் பதற்றம் அதிகரிப்பு
இதனால் இருதரப்பு உறவும் சுமூகமாக இல்லை. மோதல் போக்கு ஏற்படும் நிலை தொடர்ந்து உள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுசி தைவான் சென்றார். சீனா எதிர்ப்பையும் மீறி அவர் தைவான் சென்றதால் அன்று முதல் சீனாவின் போர் விமானங்கள் வான் எல்லைகளை கடந்து தைவானுக்குள் நுழைந்துள்ளது. இதனால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது.
வெடிக்கும் ஏவுகணைகள்
தற்போது தைவானின் எல்லைப்பகுதியின் அருகே சீனா ஏவுகணைகளை வீசி போர்ப்பயிற்சி செய்கிறது. சீனாவின் போர்க்கப்பல்களும், ராணுவ விமானங்களும் தங்கள் எல்லைக்குள் நுழைவதாக தைவான் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் தான் தைவானின் முக்கிய தீவு ஒன்றின் மீது சீனா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
தைவான் கோரிக்கை
இந்நிலையில் தான் தைவான் அதிபர் சாய் இங் வென் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‛‛தைவான் அரசும், ராணுவமும் சீனாவின் இராணுவ பயிற்சிகள் மற்றும் போர் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஜனநாயக ரீதியிலான தைவானை ஆதரிக்கவும், தைவான் பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்து போர் பதற்றத்தை தணிக்கவும் சர்வதேச நாடுகளின் ஆதரவை கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
பிற நாடுகளின் நிலைப்பாடு என்ன?
தற்போது வரை தைவானுக்கு அமெரிக்கா வெளிப்படையாக ஆதரவு கூறியுள்ளார். மாறாக பிற நாடுகள் இன்னும் தைவானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் சீனா-தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையீடுவது சரியில்லை எனக்கூறி சீனாவுக்கு ஆதரவாக ரஷ்யா, வடகொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் குரல் கொடுத்துள்ளன. இருப்பினும் தைவான் சார்பில் தற்போது தான் முதல் முதலாக சர்வதேச அளவில் ஆதரவு கோரப்பட்டுள்ளது. இதனால் தைவானுக்கு ஆதரவாக பிற நாடுகள் களமிறங்கலாம் என கூறப்படுகிறது.