கண்டு பிடித்த இந்தியா! ஆப்கானிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பாகிஸ்தான் உளவுத்துறை செய்த சதி.. போச்சு
காபூல்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. தாலிபான்களை வீழ்த்த பாகிஸ்தான் சதிவேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் விமானங்களை கடத்தவும், தாக்குதல் செய்யும் வகையில் முக்கிய தகவல்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு பிரிவை சேர்ந்த அதிகாரி சேகரித்து உள்ளார். இதுபற்றி ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் அறியாத நிலையில் இந்தியா முக்கிய எச்சரிக்கையை செய்துள்ளது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே கடும் மோதல் போக்கு நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக அந்த அமைப்பின் முகாம் மீது பாகிஸ்தானின் போர் விமானங்கள் கடந்த மாதம் தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள், குழந்தைகள் உள்பட 47 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதல் என்பது பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே பெரிய மோதலாக ஏற்பட்டுள்ளது. இருநாடுகளும் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இதனால் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலில் தாலிபான்களின் கை தான் தற்போது வரை ஓங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தாலிபான்களுக்கு உரிய பதிலடி கொடுக்க பாகிஸ்தான் பல்வேறு வேலைகளை தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஆப்கானிஸ்தானின் விமான நிலையங்கள் மற்றும் வான்வெளியை உளவு பார்க்கும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானில் ஐஎஸ்ஐ எனும் உளவு பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சாத அதத் முகமது. இவர் தான் ஆப்கானிஸ்தான் விமான போக்குவரத்து துறை சார்ந்த விஷயங்களை உளவு பார்த்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அதாவது ஆப்கானிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் மற்றும் விமான நிலையங்கள் பற்றிய முக்கிய தகவல்களை அளிக்கும் நபர்களுடன் அவர் தொடர்பில் இருக்கிறார். விமான பாதை மற்றும் மேனிஃபெஸ்ட் உட்பட அனைத்து தகவல்களையும் சேகரித்து வருவதாக ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் துணைத் தலைவர் அம்ருல்லா சலேவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சாத அதத் முகமது ஆப்கானிஸ்தானில் உள்ள நான்கு முக்கிய விமான நிலையங்களை கையாளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சொந்தமான ஜிஏஏசி நிறுவனத்தில் சேரவும் முடிவு செய்து முயற்சி மேற்கொண்டார். கடந்த 2024ம் ஆண்டு கோஸ்ட் மாகாணத்தின் விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அவர் ஆப்கானிஸ்தான் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக தாலிபான்கள் அந்த ஒப்பந்தத்தை செய்யவில்லை.
இருப்பினும் சாத அதத் முகமது விடவில்லை. தனக்கு சாதகமான அதிகாரிகளை ரகசியமாக நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதில் வெற்றியும் பெற்றுள்ளார். கோஸ்ட் விமான நிலையத்தின் செயல்பாடுகள், விமானங்களின் முழு விபரங்களை யாருக்கும் தெரியாமல் அவர் பெற்றுள்ளார்.
இதனை இந்திய உளவுத்துறையும் கண்டுபிடித்துள்ளது. இதுபற்றி, ‛‛ஐஎஸ்ஐ உடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானின் விமான நிலையங்களை பற்றிய விபரங்களை அதிகாரிகளிடம் பெற முயற்சிக்கப்பட்டது. ஆனால் பணம் என்பது முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதுபற்றி ஆப்கானிஸ்தான் தாலிபான்களால் கண்டுபிடிக்க முடியவில்லை'' என்று நம் நாட்டு உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பொதுவாக விமான நிலையத்தின் செயல்பாடு, விமானங்களின் பாதை உள்ளிட்டவை பற்றிய விபரங்கள் பிற நாட்டுக்கு கிடைக்கும்போது அந்த நாட்டில் அந்த விமானத்தை கடத்த முடியும். அதேபோல் குறிப்பிட்ட அந்த விமானத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை நடத்த முடியும். இதனால் தற்போது ஆப்கானிஸ்தான் சுதாரித்துள்ளது. வெளிநாட்டினர் மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களை பணிக்கு நியமனம் செய்ய மறுத்து வருகிறது.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு ஆப்கானிஸ்தானில் மட்டும் இந்த செயலை செய்யவில்லை. இந்தியாவிலும் தனது வேலையை காட்டி உள்ளது. டெல்லியில் கடந்த 2024ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் தூதரகம் திறக்கப்பட்டது. அப்போது தூதரக பேச்சுவார்த்தை குழுவில் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பில் உள்ள அதிகாரியை யாருக்கும் தெரியாமல் நியமித்தது. இதுதவிர ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் 150க்கும் அதிகமான ஐஎஸ்ஐ அதிகாரிகள் இருப்பதாக கூறப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications