நேபாளம்: இந்தியாவை எதிர்க்கும் பிரசண்டா, சர்மா ஓலி இணைந்து புதிய ஆட்சி... சீனாவுக்கு செங்கம்பளம் ரெடி!
காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக மாவோயிஸ்டுகள் கட்சியின் முன்னாள் தலைவரான பிரசண்டா Prachanda இன்று பதவியேற்க உள்ளார். நேபாளத்தின் பிரதமராக பிரசண்டா 3-வது முறையாக பதவியேற்கிறார். நேபாளத்தில் பிரசண்டாவும் முன்னாள் பிரதமரான கேபி சர்மா ஓலியும் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளனர். பிரசண்டா, சர்மா ஓலி இருவருமே இந்தியாவை எதிர்க்கக் கூடிய சீனா ஆதரவாளர்கள் என்பதால் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
இந்தியாவுடன் 1850 கி.மீ நீளம் எல்லையை பகிர்ந்து கொள்ளக் கூடியது நேபாளம். இது ஒரு இருந்து நாடு என அறிவிக்கப்பட்டாலும் இந்தியாவுடன் பல சந்தர்ப்பங்களில் மோதல் போக்கை கடைபிடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. இந்தியாவை நம்பித்தான் நேபாளத்தின் அத்தியாவசிய பொருட்கள் தேவையே இருக்கிறது. ஆனாலும் நேபாளம் இந்தியாவுடன் மல்லுக்கட்டுவதை தொடர்ந்து கடைபிடிக்கிறது.

இந்தியா, நேபாளம் இடையே சிறிய அளவிலான எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. லிபுலேக் கணவாய், காலாபானி, லிம்பியதுரா ஆகிய இடங்களை மையமாக வைத்து எல்லை பிரச்சனை இருநாடுகளிடையே இருந்து வருகிறது. இந்த பகுதிகளை தங்களது நாட்டின் வரைபடத்தில் நேபாளம் இடம்பெறச் செய்து நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற சம்பவம், 2 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதன் பின்னணியில் சீனா இருக்கிறது என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு.
இந்தியாவை நம்பி இருந்த நேபாளம் மெல்ல மெல்ல சீனாவின் பக்கம் சாயத் தொடங்கிவிட்டது. இந்தியாவிடம் இருந்து எத்தகைய உதவிகளைப் பெற்றதோ, அதே உதவிகளை சீனாவிடமிருந்தும் நேபாளம் பெறத் தொடங்கியது. இதனால் நேபாளத்தின் கைப்பொம்மையாக நேபாளம் உருமாறிப் போனது. இந்தியாவுக்குள் சீனா ஊடுருவ நேபாள எல்லைகள் உதவக் கூடும் என்கிற அச்சமும் இருக்கிறது.
பொதுவாக நேபாளம் என்பது இந்தியா, பாகிஸ்தான், சீனா உளவு அமைப்புகள் வலம் வரும் பிரதான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இந்தியாவுக்குள் பாகிஸ்தான், சீன உளவாளிகள் சாலைமார்க்கமாக ஊடுருவ சாத்தியமான நிலப்பரப்பு நேபாளம் வழிதான். ஆகையால் நேபாளத்தை இந்தியா எப்போதும் கண்காணித்து கொண்டே இருக்கிறது. அண்மையில் நேபாள நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போதும் கூட இந்திய கொள்கை வகுப்பாளர் குழுவினர் நேபாளத்துக்கு பயணம் மேற்கொண்டு ஆலோசனைகளை நடத்தி இருந்தனர்.
நேபாள நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதமாகியும் புதிய ஆட்சி அமையமால் இருந்தது. நேபாளத்தின் பிரதமராக இருந்த ஷேர்பகதூர் தேவுபா தொடர்ந்து பிரதமராக இருப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது திடீரென இந்திய எதிர்ப்பாளர்களான மாஜி மாவோயிஸ்ட் பிரசண்டா மற்றும் கேபி சர்மா ஓலி இருவரும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளனர். நேபாள நாடாளுமன்றத்தில் மொத்தம் 275 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 168 பேர், மாஜி மாவோயிஸ்ட்டான இந்திய எதிர்ப்பாளர் பிரசண்டாவை ஆதரிக்கின்றனர்; அதாவது சிபிஎன் யுஎம்எல்- 78; சிஎபின் எம்எஸ்- 32; ஆர்எஸ்பி 20; ஆர்பிபி 14; ஜேஎஸ்பி 12; ஜனாமத் 6 உள்ளிட்டோர் பிரசண்டாவை ஆதரிக்கின்றனர்.
பிரசண்டா இன்று நேபாள பிரதமராகிறார். நேபாளத்தில் 3-வது முறையாக பிரசண்டா பிரதமராகி இருக்கிறார். இந்திய எதிர்ப்பாளர்கள் இருவரும் புதிய ஆட்சியை நேபாளத்தில் அமைத்திருப்பதால் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை டெல்லி மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
இதனிடையே நேபாள பிரதமராக பொறுப்பேற்கும் பிரசண்டாவுக்கு நமது பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில், நேபாள பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காம்ரேட் பிரசந்தாவிற்கு (பிரசண்டா) நல்வாழ்த்துகள். ஆழ்ந்த கலாச்சார மற்றும் மக்கள் இடையேயான இணைப்பின் அடிப்படையில் இந்தியா, நேபாளம் இடையேயான தனித்துவம் வாய்ந்த உறவு அமைந்துள்ளது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற மிகுந்த ஆவலோடு இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications