மேகாலயா, நாகாலாந்து தேர்தல்: நாளை வாக்குப் பதிவு- வடகிழக்கிலும் பாஜக வெற்றிக் கொடி பறக்குமா?
மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் நாளை தேர்தல் நடைபெறுகிறது.
ஷில்லாங்: மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜகவின் வெற்றி கொடி பறக்குமா? என்கிற எதிர்பார்ப்பு தொடருகிறது.
மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இம்மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மேகாலயா மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 375 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

மேகாலயா, நாகாலாந்து ஆகிய இரு மாநிலங்களிலும் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த இரு மாநிலங்களும் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக உள்ளவை. இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆதிக்கம் முடிவுக்கு வந்து மாநில கட்சிகள் ஆட்சி அமைத்து வருகின்றன. இரு மாநிலங்களிலும் மாநில கட்சிகளுடன் பாஜக இணைந்து கொண்டிருக்கிறது.
கிழக்கின் ஸ்காட்லாந்து என புகழ் பெற்ற மாநிலம் மேகாலயா. இம்மாநிலத்தில் மாநில கட்சியான என்.பி.பி பாஜக மற்றும் மாநில கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. கடந்த 2018 தேர்தலில் 47 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக வெறும் 2 இடங்களில்தான் வென்றது. இம்முறை என்.பி.பி கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு 60 தொகுதிகளிலுமே பாஜக வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. மேகாலயாவில் மாட்டிறைச்சி பிரதான உணவு. இந்தியாவின் பிற மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு எதிராக மிக மிக கடும் நிலைப்பாட்டை எடுக்கிறது பாஜக. ஆனால் மேகாலயாவில் மாட்டிறைச்சி சாப்பிடுவோம் என அறிவிக்க வேண்டிய நெருக்கடி பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. பாஜக தனித்து ஆட்சி அமைத்தால் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படும் என்கிற அச்சம் மேகாலயாவில் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கு போராடி வருகிறது.
ஆனால் காங்கிரஸை உயிர்பிக்க வலிமையான தலைமை இல்லாத பெருந்துயரில் இருக்கிறது காங்கிரஸ். அக்கட்சிக்கு பெரும் சவாலாக இருப்பவர் மமதா பானர்ஜி. 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது 21 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாகத்தான் இருந்தது. ஆனால் 20 இடங்களில் வென்ற என்.பி.பி, பாஜக மற்றும் சிறிய கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு மமதாவின் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துவிட்டனர். இதனால் மேகாலயா மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாகிவிட்டது. இந்த முறை மேகாலாயாவில் மாநில கட்சிகளுடன் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் சரிக்கு சமமாக மல்லுக்கட்டுகிறது.
நாகாலாந்து
நாகாலாந்து மாநிலத்தைப் பொறுத்தவரையில் என்.டி.பி.பி. பிரதான கட்சியாக இருந்து வருகிறது. 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது இந்த கட்சி. 2018-ம் ஆண்டு தேர்தலில் 18 இடங்களில் என்டிபிபி வென்றது. 12 இடங்களில் வென்ற பாஜகவுன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. பின்னர் எதிர்க்கட்சியான என்.பி.பி.யும் ஆட்சியில் இணைந்தது. நாட்டிலேயே எதிர்க்கட்சி இல்லாத ஒரு சட்டசபையாக நாகாலாந்து இருந்தது.
தற்போதைய தேர்தலில் பாஜக 20; கூட்டணி கட்சியான என்டிபிபி 40; காங்கிரஸ் கட்சி 23 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான என்.பி.எப். 22 இடங்களிலும் போட்டியிடுகின்றன. லோக் ஜன்சக்தி 15, என்.பி.பி.- தேசியவாத காங்கிரஸ் தலா 12 இடங்கள் சிபிஐ 9, ஐக்கிய ஜனதா தள் 7, ஆர்ஜேடி 3 இடங்களில் போட்டியிடுகிறது.
மேகலாயா, நாகாலாந்து இரு மாநிலங்களிலும் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் பாஜக வேட்பாளர்கள் கிறிஸ்தவர்கள்தான். இரு மாநிலங்களிலும் பாஜக 80 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இதில் 75 பேர் கிறிஸ்தவர்கள். காங்கிரஸும் வழக்கம் போல இதே பார்முலாவைத்தான் கடைபிடித்துள்ளது.
நாகாலாந்து மாநில தேர்தலில் மொத்தம் 183 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 4 பேர் மட்டுமே பெண்கள். நாகாலாந்து மாநிலத்தில் இதுவரை 14 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. ஒரு தேர்தலில் கூட பெண் எம்.எல்.ஏ. சட்டசபைக்குள் நுழைந்ததும் இல்லை. நாகாலாந்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13,17,632 . இவர்களில் ஆண்கள் 6,61,489. பெண்கள் 6,56,143.












Click it and Unblock the Notifications