ஓமிக்ரான் வைரசை கட்டுப்படுத்துமா தங்கள் தடுப்பூசி? கோவிஷீல்ட் தயாரிப்பு நிறுவனம் ஆய்வு
ஜெனீவா: புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக தங்களது தடுப்பூசி செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்து இருக்கிறது இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்கி வரும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்.
உலகம் முழுக்க இதுவரை 2 பில்லியன் அளவுக்கு தடுப்பூசிகளை அஸ்ட்ராஜெனகா வழங்கியிருக்கிறது.
இந்த நிலையில்தான் புதிய வகை கொரானா வைரஸ் 32 வகைகளில் ஒரு உருமாற்றம் அடையக் கூடியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பதால் அதற்கு எதிராக இந்த தடுப்பூசி வேலை செய்கிறதா என்பதை ஆய்வு செய்யப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.
அதிகரிக்கும் கொரோனா பரவல்.. நியூயார்கில் அவசர நிலை பிரகடனம்!
செயல் திறன்
இதற்கான பணிகளை தொடங்கிவிட்டது அஸ்ட்ராஜெனகா. சில விஞ்ஞானிகள், ஓமிக்ரான் வைரசின் ஸ்பைக் புரோட்டீன் மாற்றங்கள் மோனோக்ளோனல் ஆன்டிபாடி மருந்துகளின் செயல்திறனைத் தடுக்கலாம் என்று கவலை தெரிவித்தாலும், அஸ்ட்ராஜெனெகாவால் தயாரிக்கப்பட்ட கூட்டு மருந்து அதன் செயல்திறனைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆன்டிபாடி
"இந்த புதிய வேரியண்ட்டுக்கு எதிராக எங்கள் நீண்டகால ஆன்டிபாடி கலவையான AZD7442ஐ நாங்கள் சோதித்து வருகிறோம், மேலும் வைரஸுக்கு எதிரான இரண்டு சக்திவாய்ந்த ஆன்டிபாடிகளைக் கொண்டிருப்பதால், செயல்திறனைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று நம்புகிறோம்," என்று அஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது.
மாடனா நிறுவனம்
அமெரிக்காவை சேர்ந்த மாடனா தடுப்பூசி நிறுவனம் பூஸ்டர் தடுப்பூசிகளை புதிய வகை வைரஸுக்கு எதிராக செயல்படும் வகையில் மாற்றி அமைத்து செலுத்த இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதேநேரம் உலக சுகாதார அமைப்பு இதுபற்றி கூறுகையில் புதிய வகை வைரஸ் தடுப்பூசிக்கு கட்டுப்படுகிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு சில வாரம் ஆகும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆய்வுகள் நடத்திய பிறகுதான் அதுபற்றி தெரிவிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மோடி ஆலோசனை
புதிய வகை வைரஸ் உலகம் முழுவதுமே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று உயர் அதிகாரிகளுடன் நோய் கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். தடுப்பூசிகள் பலன் தருமா தராதா என்பதை எந்த ஒரு நிறுவனமும் இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.