96 வயதில் பள்ளிக்குச் செல்லும்மெக்சிகோ பாட்டி.. 100 வயதிற்குள் உயர்கல்வியை முடிக்க இலக்கு!
96 வயது பாட்டி ஒருவர் பள்ளிக்குச் சென்று வருகிறார்.
மெக்சிகோ: மெக்சிகோவில் 96 வயது பாட்டி ஒருவர் பள்ளியில் சேர்ந்து படித்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் டஸ்ட்லா குயிடியரஷ் பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர் குயாடலூப் பலேசியஸ் என்ற 96 வயது பாட்டி. குடும்பச்சூழல் மற்றும் வறுமை காரணமாக சிறுவயதில் இவரால் பள்ளி சென்று கல்வி கற்க இயலவில்லை. எனவே, விவசாயக் கூலி வேலைக்கு அவர் சென்றார்.
பருவ வயதையடைந்ததும் பலேசியஸுக்கு திருமணமானது. முதல் மற்றும் இரண்டாம் திருமணம் மூலம் அவருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தது. கோழி வியாபாரம் செய்து தன் குழந்தைகளை அவர் வளர்த்தார். அனுபவப் பாடத்தின் மூலம் கணக்குகளை அவர் கற்றுக்கொண்டார். ஆனபோதும், பலேசியஸுக்கு பள்ளி சென்று கல்விக் கற்க இயலவில்லையே என்ற ஏக்கம் இருந்து வந்தது.
இந்நிலையில், குடும்பக் கடமைகள் முடிந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு தனது 92 வயதில் மீண்டும் பள்ளி செல்ல முடிவெடுத்தார் பலேசியஸ். அதன்படி முதியோர் கல்வி திட்டத்தின் கீழ் மீண்டும் அவர் படிக்கத் தொடங்கினார்.
4 ஆண்டுகளில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி பாடங்களை படித்து முடித்த பலேசியஸ்ம் விட்டார். உயர்நிலை பள்ளி, கல்வியை முதியோர் கல்வி திட்டத்தில் படிக்க முடியாது. எனவே டஸ்ட்லா குடியரஷ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் அவர் மாணவியாக சேர்ந்துள்ளார்.
முதல் நாள் பள்ளிக்கு சென்ற அவர் தன்னை விட 80 வயது குறைந்த மாணவ, மாணவிகளுடன் சகஜமாக பழகினார். தனது 100-வது வயதுக்குள் உயர் கல்வியை முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் படித்து வரும்,பலேசியஸை பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கைதட்டி வரவேற்றனர்.
தற்போது நன்றாக எழுத படிக்க கற்றுக் கொண்டுள்ள பலேசியஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்த தள்ளாத வயதில் அவர் பள்ளி வருவதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், 'எனது பாய் பிரண்டுகளுக்கு 'காதல் கடிதம்’ எழுத வேண்டும் என்ற ஆசையில் எழுத, படிக்க தொடங்கினேன். தற்போது என்னால் காதல் கடிதங்கள் எழுத முடியும்’ என நகைச்சுவையுடன் பதிலளித்துள்ளார்.