6 நிமிடங்களில் ரூ900 கோடிக்கு ஏலம் போன பேகானின் ஓவியம்: ஓவிய வரலாற்றில் புதிய சாதனை
நியூயார்க்: பிரிட்டன் ஓவியர் பேகான் வரைந்த ஓவியமொன்று சுமார் 900 கோடி ரூபாய்க்கு ஏலமெடுக்கப் பட்டு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல ஓவியர் பிரன்சிஸ் பேகான். இவரது தலைசிறந்த ஓவியங்களில் ஒன்றான மூன்று கோணங்களில் வரையப் பட்ட ஓவியம் ஒன்று நேற்று ஏலத்தில் விடப்பட்டது.
இதுவரை ஓவிய வரலாற்றிலேயே முதன்முறையாக ரூ900 கோடிக்கு அந்த ஓவியம் ஏலத்தில் எடுக்கப்பட்டு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
மூன்று கோண ஓவியம்...
கடந்த 1969ம் ஆண்டு, ஓவியர் பேகான் அவரது நண்பர் லூசியான் பிராய்டை மாடலாக கொண்டு மூன்று ஓவியங்களை வரைந்தார். மூன்று கோணங்களில் வரையப்பட்ட இந்த ஓவியம் பேகானின் தலைச்சிறந்த ஓவியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஏலம்....
நேற்று நியூயார்க் ஏல மையத்தில் ஏலம் விடப் பட்ட இந்த ஓவியம் அதிகபட்சமாக 85 மில்லியன் டாலருக்கு விற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
127 மில்லியனுக்கு....
ஆனால், ஏலத்தின் தொடக்கமே 80-மில்லியன் டாலரில் தான் ஆரம்பித்தது. கடைசியாக போன் வாயிலாக சுமார் 127 மில்லியன் டாலருக்கு ஓவியம் ஏலம் எடுக்கப் பட்டது.
6 நிமிடத்தில்....
ஏலம் தொடங்கிய 6 நிமிடத்திலேயே விற்கப்பட்ட இந்த ஓவியத்தின் மதிப்பு கமிஷன் தொகையுடன் சேர்ந்து 142 மில்லியன் டாலர் ஆகும். அதாவதும் இந்திய மதிப்பில் சுமார் 900 கோடி ரூபாய்க்கு மேல்.
புதிய சாதனை....
இந்த ஓவியமே உலகில் அதிகத்தொகைக்கு விற்கப்பட்ட ஓவியமாக புதிய சாதனை புரிந்துள்ளது. இதற்கு முன்னர், கடந்த ஆண்டு எட்வர்டு முஞ்ச் வரைந்த ஓவியம்தான் அதிகபட்சமாக 119 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.