முடங்குதே வங்கதேசம்? டொனால்ட் டிரம்ப் வைத்த பெரிய ‛ஆப்பு’.. திருப்பூருக்கு அடித்த பெரிய ‛ஜாக்பாட்’
டாக்கா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வங்கதேசத்துக்கு 37 சதவீதம் கூடுதல் வரியை விதித்துள்ளார். வங்கதேசத்தின் ஜவுளித்துறையை பொறுத்தவரை அமெரிக்காவுக்கு தான் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் வங்கதேசத்தின் உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ஜவுளித்துறை மொத்தமாக முடங்கும் என்றும், இதனால் திருப்பூருக்கு பெரிய ஜாக்பாட் அடிக்க உள்ளதாகவும் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இது எப்படி சாத்தியம்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
அமைதியாக இருந்த வங்கதேசத்தில் கடந்த ஆண்டு பிரளயம் வெடிக்க தொடங்கியது. மாணவர்கள் அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு எதிராக இந்த போராட்டம் நடந்தது. இது வன்முறையாக மாறியது.
வங்கதேசத்தில் தற்போது இடைக்கால அரசு நடந்து வருகிறது. தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக அந்த நாட்டில் நடந்த போராட்டம் வன்முறையானதால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார். அதன்பிறகு அங்கு இடைக்கால அரசு நடந்து வருகிறது.

அடிமேல் அடி கொடுக்கும் டிரம்ப்
இருப்பினும் வங்கதேசத்தில் இன்னும் கூட அமைதி திரும்பவில்லை. தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ராணுவத்தினர் தொடர்ந்து பணியாற்றி வரகின்றனர். இந்த பிரச்சனையால் அந்த நாட்டில் தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல தொழிற்சாலைகள் உற்பத்தியை குறைத்துள்ளன. இன்னும் சில தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் வங்கதேசம் நிதி நெருக்கடியையும் எதிர்கொள்ள தொடங்கி உள்ளது. இப்படியான சூழலில் தான் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் வங்கதேசத்துக்கு அடிமேல் அடியை கொடுத்து வருகிறார். டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவுடன் அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்த USAID நிதியை நிறுத்தினார். அதன்பிறகு இப்போது வங்கதேசத்துக்கு கூடுதல் வரியை விதித்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.
வங்கதேசத்துக்கு 37 சதவீத வரி
அதாவது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2ம் தேதி பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார். அதாவது அமெரிக்காவின் பொருட்களுக்கு ஒவ்வொரு நாடுகளும் விதிக்கும் வரிகளை போல் அமெரிக்காவும் அந்தந்த நாடுகளில் இருந்து வாங்கும் பொருட்களுக்கு வரியை உயர்த்துவதாக அறிவித்தார். அதனை கடந்த 2 ம் தேதி நிறைவேற்றினார்.
டொனால்ட் டிரம்ப். அதன்படி நம் நாட்டுக்கு 26 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்பட்டது. அதேவேளையில் அண்டை நாடான வங்கதேசத்துக்கு 37 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் எதிரி நாடான சீனாவுக்கே இந்த முறை 34 சதவீதம் தான் அமெரிக்கா வரி விதித்த நிலையில் அதனை விட வங்கதேசத்துக்கு கூடுதல் விதிகளை விதித்தார் டொனால்ட் டிரம்ப். இது வங்கதேசத்துக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது.
முடங்கும் ஜவுளித்துறை
குறிப்பாக வங்கதேசத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வரும் ஜவுளித்துறை மொத்தமாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. அமெரிக்கா சார்பில் இதற்கு முன்பு விதிக்கப்பட்டு இருந்த பருத்தி மீது இருந்த 16 சதவீத வரி மற்றும் பாலிஸ்டர் துணிகள் மீது இருந்த 32 சதவீத வரிகளுக்கு பதிலாக புதிதாக 37 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வங்கதேசம் பெரிதும் பாதிக்கப்பட உள்ளது. ஏனென்றால் வங்கதேசத்தின் ஜவுளித்துறை என்பது அமெரிக்காவை மையப்படுத்தி இயங்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வங்கதேசத்தில் இருந்து 8.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனை வங்கதேசத்தின் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் சங்கம் உறுதி செய்துள்ளது. இப்போது அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிக்கும்போது வங்கதேச ஏற்றுமதியாளர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களால் அமெரிக்காவுக்கு ஜவுளிகளை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை என்பது ஏற்படும்.
பிறநாடுகளை நாடும் அமெரிக்கர்கள்
இதுபற்றி ஆர்டிஎம் குழுமத்தின் தலைவர் ரகிபுல் ஆலம் சவுத்ரி முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். இவரது இந்த நிறுவனம் ஜவுளித்துறையில் ஆண்டுக்கு 25 மில்லியன் அமெரிக்கா டாலர் அளவுக்கு உற்பத்தி செய்து வருகிறது. இப்படியான சூழலில் ஆலம் சவுத்ரி கூறுகையில், ‛‛அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு என்பது வங்கதேசத்தை பெரிதும் பாதிக்கப்பட உள்ளது. ஜவுளித்துறையில் வங்கதேசத்துக்கு பதில் அமெரிக்கர்கள் பிற நாட்டை அணுகும் சூழல் உருவாகி உள்ளது.
மேலும் கூடுதல் வரி விதிப்பால் எங்களாலும் அமெரிக்காவுக்கு ஜவுளிகளை ஏற்றுமதி செய்ய முடியாது. மீறி ஏற்றுமதி செய்தாலும் கூட எங்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படும். இதனால் அமெரிக்காவில் எங்களின் ஜவுளிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை உருவாகும். இதனை அமெரிக்கர்கள் விரும்பமாட்டார்கள். இதனால் அவர்கள் இயல்பாகவே வரி குறைவாக உள்ள வேறு நாடுகளிடம் இருந்து ஜவுளியை வாங்குவார்கள். இதனால் வங்கதேச ஜவுளித்துறை என்பது பெரிதும் பாதிக்கப்படும்'' என்றார்.
வங்கதேச அரசு சொல்வது என்ன?
இதுபற்றி வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனிஸின் செய்தி செயலாளர் ஷபியுல் ஆலம் கூறுகையில், ‛‛இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும். இதுதொடர்பாக வருவாய்க்கான தேசிய வாரியம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது'' என்றார். வங்கதேசத்தை எடுத்து கொண்டால் ஜவுளி துறையில் சீனாவுக்கு அடுத்து 2 வது பெரிய நாடாக உள்ளது.
பல முன்னணி பிராண்டுகளின் நிறுவனங்கள் என்பது வங்கதேசத்தில் உள்ளது. வங்கதேச நாட்டின் பொருளாதாரம் என்பது ஜவுளித்துறையை நம்பித்தான் உள்ளது. அந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீத பங்கை ஜவுளித்துறை தான் பூர்த்தி செய்கிறது. தற்போது அமெரிக்காவின் வரி விதிப்பு என்பது நேரடியாக வங்கதேசத்தை பாதிக்க செய்ய உள்ளது.
திருப்பூருக்கு ‛ஜாக்பாட்’
மேலும் வங்கதேச ஜவுளித்துறை என்பது கடந்த ஆண்டு நடந்த வன்முறையை தொடர்ந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. உற்பத்திகள் குறைந்துள்ளன. இதனால் அமெரிக்கா உள்பட சில நாடுகள் வங்கதேசத்துக்கு பதிலாக இந்தியா, வியட்நாமில் உள்ள ஜவுளிகளை வாங்க தொடங்கி உள்ளன. இப்போது அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு என்பது வங்கதேசத்துக்கு மேலும் அடியாக பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழ்நாட்டில் திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலைகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புள்ளது. வங்கதேசத்துக்கு பதிலாக வெளிநாட்டினர் திருப்பூரில் இருந்து ஆயத்த ஆடை உள்ளிட்ட ஜவுளிகளை வாங்க ஆர்டர் செய்யலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications