இளைஞர் தலைவர் படுகொலை.. வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த போராட்டம்! தலைநகர் டாக்காவில் பதற்றம்
டாக்கா: வங்கதேசத்தில், கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களின் முக்கிய முகமாக இருந்த இளைஞர் தலைவரான ஷெரீப் இஸ்மான் ஹாடி துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். கடந்த வாரம் படுகொலை முயற்சியில் துப்பாக்கிச் சூட்டுக் காயமடைந்த ஹாடி, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்த மரணத்தால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கானோர், நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை வேளைகளில் தலைநகர் டாக்காவின் வீதிகளில் திரண்டனர். ஹாடிக்கு நீதி கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கலவரச் சூழல் உருவானது.

என்ன பிரச்சனை?
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் மாணவர் புரட்சி வெடித்தது. வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த புரட்சி முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா உயிரை கையில் பிடித்துக்கொண்டு இந்தியாவுக்கு தப்பி ஓடி வந்தார். இந்த புரட்சியின் முகங்களாக பல்வேறு இளைஞர்கள் அறியப்பட்டனர். அதில் ஒருவர்தான் இந்த ஷெரீப் இஸ்மான் ஹாடி. இன்குலாப் மான்சா எனும் மாணவர் அமைப்பின் தலைவராகவம் இவர் செயல்பட்டார்.
கடந்த 12ம் தேதி டாக்காவில் உள்ள மசூதியில் இவர் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்தபோது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாக்குதல்
இந்த மரணத்தையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்கா, ராஜசாகி, சிட்டகாங் பேன்ற நகரங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அலுவலகங்கள் தீ வைக்கப்பட்டன. மேலும் நாட்டின் முன்னணி நாளிதழான புரதோம் ஆலா மற்றும் தி டெய்லி ஸ்டார் அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான போராட்டம்
இந்த படுகொலையில் ஈடுபட்டவர்கள் இந்தியாவுக்கு தப்பி சென்றுவிட்டார்கள் என்று ஷெரீப் இஸ்மான் ஹாடியின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகங்களை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முயன்றனர்.
கொலையாளிகளை ஒப்படைக்கும் வரை இந்திய தூதரகத்தை மூட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தியத் துணைத் தூதரக அலுவலகம் அருகே கல்வீச்சுச் சம்பவங்கள் நடந்தன.
இந்தியாவின் நிலைப்பாடு
இந்திய வெளியுறவுத்துறை நாடாளுமன்றக் குழு, வங்கதேசத்தின் தற்போதைய சூழல் மிகவும் சிக்கலானது என்றும், அங்கு நிலவும் பதற்றமான சூழல், சிறுபான்மையினர் (இந்துக்கள்) மீதான தாக்குதல் கவலையளிக்கிறது என்றும் கவலை தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications