மிகப்பெரிய பேரழிவு..நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி..விரைந்த இந்திய பேரிடர் மீட்பு படை
தொடர் நிலநடுக்கங்களால் சிதைந்து போயிருக்கும் துருக்கி நாட்டிற்கு உதவ இந்திய பேரிடர் மீட்புப்படையினர் விரைந்துள்ளனர்.
அங்காரா: துருக்கி, சிரியாவில் மிகப்பெரிய பேரழிவு நிகழ்ந்துள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து பலியாகி போனது. பல ஆயிரம் பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக மருந்துகளுடன் இந்திய பேரிடர் மீட்புப்படையினர் துருக்கி நாட்டிற்கு விரைந்துள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 600-ஆக உயர்ந்துள்ளது. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மீட்புப்பணிக்கு உதவ முன்வந்துள்ளன.

உலகில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் மண்டலங்களில் ஒன்றாக துருக்கி நாடு உள்ளது. இங்கு அடிக்கடி பூகம்பங்கள் ஏற்பட்டு பல ஆயிரம் உயிர்கள் கபளீகரம் செய்துள்ளது. நேற்று அதிகாலையில் துருக்கி - சிரியா எல்லையில் உள்ள காசியான்டெப் நகரை மையமாகக் கொண்டு, ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 8-ஆக பதிவான நிலநடுக்கத்தால், நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
காசியான்டெப் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் நிலநடுக்கத்தால் பொருட்கள் சிதறி விழும் காட்சிகள், சிசிடிவியில் பதிவாகியுள்ளது. துருக்கியின் அதானா, குகுரோவா, மலாத்யா நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காணும் இடமெல்லாம் கட்டிட இடிபாடுகளாக காட்சியளிக்கின்றன.

நிலநடுக்கத்தால் பேரழிவு ஏற்பட்டதையடுத்து, துருக்கி ராணுவத்துடன் இணைந்து பொதுமக்களும் மீட்புப் பணியில் களமிறங்கினர். இந்நிலையில், ரிக்டர் அளவுகோலில் 7.6 மற்றும் 6 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் உணரப்பட்டன. தியர்பகீர் பகுதியில் மீட்புப் பணியின் போது சேதமடைந்த கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களும் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.துருக்கிக்கு மீட்புப்படை மற்றும் மருத்துவக்குழுவை அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இதனிடையே, டெல்லியில் உள்ள துருக்கி தூதரகத்திற்குச் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிகாரிகளிடம் ஆறுதல் தெரிவித்தார். தொடர் நிலநடுக்கமும் துருக்கி நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய துயரமாக மாறியுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார். துருக்கியில் ஏற்பட்ட அபாயகரமான நிகழ்வை நாம் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதைவிட அதிகமாக பொருட் சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது. துருக்கிக்கு அருகில் உள்ள நாடுகள் கூட இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலநடுக்கத்தில் உயிர்களையும், உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இம்மக்களுக்கு 140 கோடி இந்தியர்களும் உறுதுணையாக உள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 100 வீரர்களும், மருந்துகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக இந்திய பேரிடர் மீட்புப்படையினர் துருக்கி நாட்டிற்கு விரைந்துள்ளனர். ஆழத்தில் சிக்கியுள்ள மக்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் உதவியுடன் இந்திய மீட்புப்படையினர் துருக்கி நாட்டிற்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications