தமிழரின் மன்னிப்பால்... மரண தண்டனையிலிருந்து தப்பிய பீகார் இளைஞர்... துபாயில் நடந்த நிகழ்வு..!
ஷார்ஜா: தமிழகத்தை சேர்ந்தவர்கள் வழங்கிய மன்னிப்பால் துபாயில் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார் பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர்.
ஷார்ஜாவில் உள்ள மசாபி பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் தமிழகம் மற்றும் பீகாரை சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு தொழிலாளர்கள் முகாமில் ஏற்பட்ட வாய் தகராறு கொலையில் முடிந்தது.
அதில் தமிழக இளைஞர் பீகாரை சேர்ந்தவரால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பீகாரை சேர்ந்த இளைஞருக்கு ஷார்ஜா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஷார்ஜாவில் உள்ள சட்டதிட்டத்தின் படி கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் மன்னிப்பு வழங்காத வரை அங்கு தண்டனை எக்காரணத்தை கொண்டும் நிறுத்தப்படாது. இதனால் பீகார் இளைஞரின் குடும்பத்தினர் சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத்துல்லா மூலம் கொலை செய்யப்பட்ட தமிழக இளைஞரின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Nurses Day 2021: கொரோனா போர்க்களத்தில் போராடும் வெள்ளை உடை வீராங்கனைகளுக்கு தலைவர்கள் வாழ்த்து
இதையடுத்து தமிழக குடும்பத்தினரிடம் முதுவை ஹிதாயத்துல்லா மற்றும் வழக்கறிஞர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தி, கொலையாளியை மன்னிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட தொகை இழப்பீடாக கிடைக்கும் என எடுத்துக் கூறியுள்ளனர். மேலும், மன்னிப்பு வழங்காவிட்டால் இன்னொரு உயிர் தான் போகுமே தவிர அதனால் பலன் எதுவுமில்லை என விளக்கியுள்ளனர்.
இதன் காரணமாக அந்தக் குடும்பத்தினர் பெருந்தன்மையுடன் மன்னிப்பு கொடுத்தனர். அதனை ஷார்ஜா நீதிமன்றத்தில் சமர்பித்து, பீகார் இளைஞர் விடுவிக்கப்பட்டார்.