மேகாலயாவில் 60; நாகாலாந்தில் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த பாஜக!
ஷில்லாங்: மேகாலயாவில் 60 சட்டசபை தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. நாகலாந்தில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் பாஜக 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது.
நடப்பாண்டின் முதல் சட்டசபை தேர்தல்கள் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற உள்ளது. திரிபுராவில் பிப்ரவரி 16-ந் தேதியும் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ந் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து வாக்குகளும் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிடுகிறது. இதனையடுத்து இன்று 60 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. மேகாலயா மாநிலத்தில் மோடி பவர் என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.
இதேபோல் நாகலாந்து மாநிலத்திலும் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் என்டிபிபி கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. என்டிபிபி 40 இடங்களிலும் பாஜக 20 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன. இதனையடுத்து 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் பாஜக இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நாகாலாந்து மாநில பாஜக தலைவர் இம்னா அலாங் கூறுகையில், என்டிபிபி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்திருக்கிறோம். 40:20 என்ற அடிப்படையில் தொகுதிப் பங்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள் எங்களுக்கு வெற்றியைத் தரும். வளர்ச்சியும் அமைதியும்தான் நாகாலாந்து தேர்தலை தீர்மானிக்கும் என்றார்.
மேகாலயா மாநிலத்தைல் பொறுத்தவரையில் காங்கிரஸ் வலிமையாக இருந்த மாநிலம். 2018-ம் ஆண்டு தேர்தலின் போது 59 தொகுதிகளில் 21 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தது. ஆனால் பாஜகவும் இதர மாநில கட்சிகளும் இணைந்து ஆட்சியை கைப்பற்றின. அத்துடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெரும்பாலானோர் கூண்டோடு திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தும்விட்டனர்.
நாகாலாந்து மாநிலத்தில் எதிர்க்கட்சி என்பதே இல்லாத அளவுக்கு கட்சி தாவல் நிகழ்ந்துள்ளது. தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் ரவி, நாகாலாந்து மாநில ஆளுநராக பதவியில் இருந்தார். அப்போது ஆளும் பாஜக கூட்டணி அரசு ஆளுநர் ரவியை கடுமையாக விமர்சித்தது. ஆனாலும் நாகாலாந்து மாநில நிர்வாகத்தில் ஆளுநர் ரவி நேரடியாக தலையிட்டது பெரும் சர்ச்சையானது. இதனால் நாகாலாந்தில் இருந்து தமிழ்நாட்டு ஆளுநர் ரவி மாற்றப்பட்டதை அம்மாநில மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.