நடுவானில் சோமாலிய விமானத்தில் குண்டுவெடிப்பு: பயணி கீழே விழுந்து பலி
மொகதிஷு: சோமாலியாவில் விமானம் ஒன்று நடுவானில் பறக்கையில் குண்டு வெடித்ததால் ஓட்டை விழுந்து பயணி ஒருவர் பலியானார், 2 பேர் காயம் அடைந்தனர்.
சோமாலியா தலைநகர் மொகதிஷுவில் இருந்து 74 பயணிகளுடன் டால்லோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஜிபோட்டிக்கு புதன்கிழமை கிளம்பியது. 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கையில் திடீர் என்று விமானத்தின் வலது பக்கத்தில் ஓட்டை விழுந்தது.
விமானத்தில் சிறிய அளவில் வெடிகுண்டு விபத்து ஏற்பட்டதால் தான் ஓட்டை விழுந்தது என்று விமானி தெரிவித்துள்ளார். விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
விமானத்தில் ஓட்டை விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர். ஓட்டை வழியாக ஒரு பயணி கீழே விழுந்து பலியானார். குண்டு வெடித்த பிறகு எடுக்கப்பட்ட வீடியோவில் பயணிகள் விமானத்தில் அச்சத்துடன் அமர்ந்திருந்ததை பார்க்க முடிகிறது.
விமானத்தில் அல் கொய்தா ஆதரவு அமைப்பான ஷெபாப் தீவிரவாதிகள் தான் குண்டு வைத்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.