பாகிஸ்தான்: குண்டுவெடிப்பால் உருக்குலைந்த லாகூர் மார்க்கெட்.. 3 பேர் உயிரிழப்பு.. 20 பேர் படுகாயம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் லாகூர் நகரில் பரபரப்பான ஷாப்பிங் மார்க்கெட்டில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நமது அண்டை மாநிலமான பாகிஸ்தானின் லாகூர் நகரில் புகழ்பெற்ற அனார்கலி சந்தை உள்ளது. இந்த சந்தையில் இந்தியப் பொருட்கள் அதிகளவு விற்கப்படுவது வழக்கமாகும்.

பயங்கர குண்டுவெடிப்பு
இந்த நிலையில் அனார்கலி சந்தையில் உள்ள பான் மண்டியில் இன்று மதியம் திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் மார்க்கெட்டில் உள்ள கடைகள் மற்றும் கட்டிடங்களின் ஜன்னல்கள் வெடித்து சிதறியது. அங்கு இருந்த மக்கள் பீதி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த குண்டுவெடிப்பில் சிக்கி உடல் சிதறி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

4 பேரின் நிலை கவலைக்கிடம்
உயிரிழந்தவர்களில் ஒருவன் சிறுவன் என்பது மிகவும் சோகமான விஷயமாகும். குண்டு வெடிப்பில் சிக்கி மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

குண்டுவெடிப்புக்குக் காரணம் என்ன?
''மோட்டார் பைக்கில் இருந்த நேரத்தைக் கட்டுப்படுத்தும் சாதனம்தான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என்று ஆரம்ப விசாரணைகள் காட்டுகின்றன" என்று லாகூர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ராணா ஆரிஃப் நிருபர்களிடம் கூறினார். ''குண்டு வெடிப்பின் தன்மையை நாங்கள் கண்டறிந்து வருகிறோம். குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்" என்று துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் போலீஸ் ஆபரேஷன் டாக்டர் முகமது அபித் தெரிவித்தார்.

எந்த பயங்கரவாத இயக்கம்?
தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்பின் தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர்.குண்டுவெடிப்பில் பல மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கடைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. அந்த பகுதி முழுவதும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications