மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியருக்காக.. ஏமனில் களமிறங்கிய ஈரான்! உதித்த நம்பிக்கை ஒளி!
சனா: ஏமன் நாட்டில் கொலை வழக்கில் கைதாகி சனா நகர சிறையில் இருப்பவர் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா. இவருக்கு மரண தண்டனை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றப்படலாம் என்ற சூழல் உள்ள நிலையில், ரத்த பணம் கொடுத்து அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது நேரடியாக ஈரான் தலையிட்டுள்ளது. அது இந்தியாவுக்கு நல்ல செய்தியாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கொலை வழக்கில் ஏமன் நாட்டில் சிறையில் உள்ளவர் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா. கொலை வழக்கு விசாரணையில் அவருக்கு மரண தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்திருந்தது.

ஈரான்:
மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த சூழலில், கடந்த மாதம் இறுதியில் நிமிஷாவுக்கு மரண தண்டனைக்கு ஒப்புதல் அளித்து ஏமன் அதிபர் உறுதி ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி உறுதி செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியானது. ஒரு மாதத்திற்குள் மரண தண்டனை விதிக்கப்படும் என்பதால் பரபரப்பு நிலவியது. இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் ஏமன் அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டது.
ஏன் நல்ல செய்தி:
அதாவது நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிபர் ரஷித் அல்-அலிமி உறுதி செய்யவில்லை என்றும் இந்த வழக்கை ஏமனில் உள்ள கிளர்ச்சி படையான ஹவுதியை கையாண்டு வருவதாக விளக்கம் தரப்பட்டது. இந்தச் சூழலில் தான் ஈரான் அதிகாரிகள் நேரடியாக இதில் நேரடியாகத் தலையிட்டுள்ளனர். ஈரான் ஆதரவில் தான் ஹவுதி படை இயங்குகிறது. எனவே, ஈரானால் வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்க முடியும் என்றே நம்பப்படுகிறது.
இது குறித்து விவரம் அறிந்த சிலர் கூறுகையில், "இதுவும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர ஒரு வழி தான். ஈரானுக்கும் ஹவுதிக்கும் நல்ல ஒரு உறவு இருக்கிறது. எனவே, அதைப் பயன்படுத்த ஈரான் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.. மேலும், ரத்த பணத்திற்கான தொகையும் தயார் நிலையில் உள்ளது. அந்த நபரின் குடும்பத்தினர் மன்னிப்பு அளித்தால் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. நல்லது நடக்கும் என நாம் நம்புவோம்" என்றார்.
ரத்த பணம் என்றால் என்ன:
நமது நாட்டை பொறுத்தவரை கிரிமினல் குற்றங்களுக்கு நீதிமன்றம் தான் தண்டனை கொடுக்கும். அதாவது பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரே மன்னிப்பதாகச் சொன்னாலும் அதை ஏற்க மாட்டார்கள். செய்த தவற்றுக்குத் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். அதேநேரம் ஏமன் உள்ளிட்ட பல நாடுகளில் ரத்த பணம் என்ற ஒரு விதி இருக்கிறது. அதாவது பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் கேட்கும் தொகையைக் குற்றம் செய்த நபர் தரப்பு கொடுத்து மன்னிப்பு கோரலாம். அதை ஏற்று அவர்கள் மன்னித்தால் விடுதலை ஆகலாம் அல்லது தண்டனை குறைக்கப்படும்.
இந்த முறையில் நிமிஷாவை வெளியே கொண்டு வர ரூ.30 லட்சம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், எப்போது இந்த செயல்முறை முடியும் என்பது நமக்குத் தெரியாது. நல்லது நடக்கும் என்று காத்திருப்பது மட்டுமே ஒரே வழி. அதேநேரம் ஹவுதிக்கும் ஈரானுக்கும் நல்லுறவு உள்ள சூழலில், இதில் ஈரான் நேரடியாகத் தலையிட்டுள்ளது இந்தியச் செவிலியர் நிமிஷாவுக்கு சாதகமான ஒரு சூழலையே ஏற்படுத்துகிறது.
பின்னணி:
கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா ஏமனில் செவிலியராக வேலை செய்து வந்தார். உள்நாட்டுப் போர் காரணமாகப் பொருளாதார சிக்கல் ஏற்பட்டதால் சொந்தமாக ஒரு கிளினிக்கை தொடங்க முடிவு செய்துள்ளார். அந்நாட்டு சட்டப்படி உள்ளூர் நபருடன் சேர்ந்து மட்டுமே கிளினிக் தொடங்க முடியும் என்பதால் மஹ்தி என்ற நபருடன் சேர்ந்து கிளினிக்கை தொடங்கியுள்ளார். சில நாட்களில் நிமிஷா போட்டோவை மார்பிங் செய்த மஹ்தி, இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டதாக அங்கு அனைவரிடமும் சொல்லியுள்ளார்.
மேலும், கிளினிக் வருமானத்தை மொத்தமாக தனக்குத் தர வேண்டும் என மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் நிமிஷாவின் பாஸ்போர்ட்டையும் பிடுங்கி வைத்துக் கொண்டு மிரட்டியுள்ளார். அருகே வசித்த ஜெயில் வார்டன் ஒருவர் அளித்த ஆலோசனைப்படி, பாஸ்போர்ட்டை வாங்க மஹ்திவுக்கு மயக்க மருந்தைக் கொடுத்துள்ளார். அது ஓவர்டோஸ் ஆனதில் மஹ்தி உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications