பால்டிக் கடற்பரப்பில் நேட்டோ படைகளை சீண்டிப் பார்த்த ரஷ்ய போர்விமானங்கள்!
லண்டன்: பால்டிக் கடற்பரப்பில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் ரஷ்ய போர்விமானங்கள் பறந்ததாக இங்கிலாந்து கூறியுள்ளது.
பால்டிக் கடற்பரப்பானது ஜெர்மனி, போலந்து, ரஷ்யா, ஸ்வீடன், லிதுவேனியா, லாத்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளைத் தொட்டுக் கொண்டுள்ளது. இப்பகுதியில் நேட்டோ படைகளே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் திடீரென 7 ரஷ்ய போர்விமானங்கள் நேற்று முன்தினம் பால்டிக் கடற்பரப்பில் பறந்து கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கின்றன. இதை நேட்டோ படைகள் உறுதி செய்தன.
இதனால் மேற்குலக நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல் பதற்றம் அதிகரித்தது. அத்துடன் லாத்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன. உக்ரைனில் இருந்து கிரீமியாவை பிரிக்கும் போதும் இதே யுக்தியையே ரஷ்யா கையாண்டதாகவும் அந்நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.
அண்மையில் பால்டிக் கடற்பரப்பில் நேட்டோ படைகள் போர் ஒத்திகையில் ஈடுபட்டன. இதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.