கிரிக்கெட் விளையாட்டில் தொடரும் சோகம்.. இங்கிலாந்தில் பந்து தாக்கி இந்திய வம்சாவளி வீரர் பலி மரணம்..
லண்டன் : கிரிக்கெட் விளையாட்டின் போது, பந்து தாக்கி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர் பலியான சம்பவம் விளையாட்டுத் துறையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் தமிழ் லீக் 3-வது டிவிஷன் என்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் விளையாடிய இந்திய வம்சாவளி வீரரான தமிழகத்தைச் சேர்ந்த பாவலன் பத்மநாதன் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது எதிரணி பவுலர் வீசிய பந்து பாவலன் நெஞ்சில் பலமாக தாக்கியது.
வலியால் துடித்த பாவலன் முதலில்தன் நன்றாக இருப்பதாக கையால் சைகை காட்டினார். ஆனால் சில அடி தூரம் நடந்த அவர் சுருண்டு கீழே விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி 24 வயதான பாவலன் உயிர் பிரிந்தது. இந்த துயர சம்பவத்துக்கு அவர் விளையாடிய கிளப் உள்பட பல்வேறு கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிட்னியில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பவுன்சர் பந்து கழுத்தில் தாக்கியதில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் பரிதாபமாக பலியானார்.
உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் முழுவதும் மறையும் முன்பே கடந்த ஏப்ரல் மாதத்தில் பெங்கால் அணியின் பேட்ஸ்மேன் அங்கீத் கேஸ்ரி பீல்டிங் செய்யும் போது சக வீரருடன் கவனக்குறைவாக மோதியதில் தலையில் காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
கிரிக்கெட் உலகில் இது போன்று அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் பெரும் அதிர்ச்சியையும், கிரிக்கெட் விளையாட்டின் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.