தீவிரவாத தாக்குதல் அச்சம்: பெல்ஜியம் நாட்டு தலைநகரில் பஸ், ரயில் போக்குவரத்து திடீர் நிறுத்தம்
ப்ருஸ்செல்ஸ்: தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தலாம் என்று கிடைத்த தகவலை தொடர்ந்து, பெல்ஜியம் தலைநகர், ப்ருஸ்செல்ஸ் நகரில் பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
பாரீசில் கடந்த வாரம் சனிக்கிழமை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலை நடத்தினர். இதில் 130 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் உளவுத்துறைக்கு ஒரு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. தீவிரவாதிகள் இன்று பெல்ஜியத்தை தாக்க கூடும் என்ற அந்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நேட்டோ கூட்டுப்படைகளின் தலைமையகம், ஐரோப்பிய யூனியன் தலைமையகம் போன்றவை தலைநகர் ப்ருஸ்செல்ஸில்தான் உள்ளது என்பதால், அந்த நகரில் மெட்ரோ ரயில், டிராம் வண்டி, பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மக்களிடையே தாக்குதல் குறித்த பீதி அதிகரித்தது. நாளை வரை மெட்ரோ ரயில் இயக்கம் இருக்காது என்று அந்த நகர நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், தொடர்ந்து பாதுகாப்பு படையினர் ரோந்து சுற்றி, தீவிரவாதிகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒருவர், துருக்கி நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பாதுகாப்பு நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.