கனடா பிரதமர் பதவி.. இந்திய வம்சாவளி எம்பி வேட்பு மனு! சபையில் தாய்மொழியில் பேசி நெகிழ்ச்சி
ஒட்டாவா: இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா எம்பியான சந்திர ஆர்யா, கனடாவின் பிரதமர் பதவிக்கான ரேசில் அதிகாரப்பூர்வமாக எண்ட்ரி கொடுத்துள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு சபையில் உரையாற்றிய சந்திர ஆர்யா, கன்னட மொழியில் உரையாற்றினார்.
கனடா பிரதமராக இருந்தவர் ஜஸ்டின் ட்ரூடோ. காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த வித ஆதாரங்களும் இன்றி இந்தியாவுக்கு எதிராக பேசி வந்தார். இதனால் இந்தியா - கனடா இடையேயான உறவில் முன்னெப்பொதும் இல்லாத அளவுக்கு விரிசல் ஏற்பட்டது. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு, அவரது கொள்கைகள் ஆகியவற்றால் சொந்த கட்சிக்குள்ளிருந்தே அவருக்கு நெருக்கடி கிளம்பியது.

அவரது அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சியும் ஆதரவை வாபஸ் பெறுவதாக மிரட்டியதால் வேறு வழியின்றி தனது பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். புதிய பிரதமர் பதவியேற்கும் வரை பதவியில் நீடிக்க உள்ளதாகவும் ட்ரூடோ கூறியுள்ளார். இதனால் கனடாவில் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி அங்கு ஹாட் டாபிக்காக போய்க்கொண்டு இருக்கிறது.
கனடாவின் புதிய பிரதமராக வாய்ப்பு இருக்கும் நபர்களில் சில இந்திய வம்சாவளி எம்பிக்களின் பெயர்களும் அடிபடுகின்றன. இதில் கோவையை பூர்வீகமாக கொண்ட கனடா எம்பியான அனிதா ஆனந்த் (வயது 57), மற்றொரு இந்திய வம்சாவளியான எம்.பி., சந்திரா ஆர்யா உள்ளிட்டோரும் கட்சி தலைவருக்கான போட்டியில் அடிபட்டது. இந்த சூழலில், பிரதமர் பதவி போட்டியில் இருந்து விலகுவதாக அனிதா ஆனந்த் அறிவித்தார்.
அதேவேளையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திர ஆர்யா அதிகாரப்பூர்வமாக பிரதமர் ரேசில் குதித்துள்ளார். அதாவது, பிரதமர் பதவிக்கு போட்டியிட நாமினேஷன் செய்துள்ளார். இதையடுத்து அவையில் பேசிய சந்திர ஆர்யா, கன்னடாவில் உரையாற்றினார். கர்நாடக மாநிலம் துமுகூரு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் சந்திர ஆர்யா. கனடாவிற்கு செல்லும் முன்பாக தர்வாத்தில் எம்பிஏ முடித்துள்ளார்.
சந்திர ஆர்யா, காலிஸ்தான் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை கொண்டவராக அறியப்படுகிறார். கனடாவில் இந்துக் கோவில்களில் அத்துமீறல்கள் நடைபெற்ற போது அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். லிபரல் கட்சி தலைவருக்கும் பிரதமர் பதவிக்கும் போட்டியிடுவதாக கடந்தசில நாட்களுக்கு முன்பே அறிவித்த சந்திர ஆர்யா, கனடாவை இறையாண்மை மிக்க குடியரசாக மாற்றுவேன் என பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் தற்போது கடினமான அரசியல் முடிவுகள் தேவை எனவும் கூறினார்.
யார் இந்த சந்திர ஆர்யா
20 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவின் ஒட்டாவாவுக்குச் சென்ற சந்திர ஆர்யா, முதலில் இன்ஜினியராக பணிபுரிந்தார். பின்னர், கடின உழைப்பால் தொழிலதிபராக உயர்ந்தார். 2015 ஆம் ஆண்டு முதல் முறையாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸுக்கு தேர்வு ஆனார். அவர் 2019-இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் கன்னடத்தில் பேசி இந்தியர்கள் மத்தியில் பெரிதும் கவனிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications