யு.கே.: விமான விபத்தில் பெற்றோர் பலி, உயிருக்கு போராடும் 6 வயது சிறுவன்
லண்டன்: இங்கிலாந்தில் நடந்த விமான விபத்தில் பெற்றோரை இழந்து படுகாயம் அடைந்த 6 வயது சிறுவன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இங்கிலாந்தில் உள்ள வார்விக்ஷயரைச் சேர்ந்தவர் லெவிஸ் டான்கின்சன்(50). விளம்பர நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அவரது மனைவி சாலி(44). அவர்களின் மகன் ஜார்ஜ்(6). புத்தாண்டு அன்று தான் லெவிஸ் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை லெவிஸ் தனது மனைவி மற்றும் மகனுடன் சிறிய ரக விமானத்தில் கிளம்பினார். விமானத்தை லெவிஸ் ஓட்டினார். விமானம் ஹாம்ப்ஷயரில் உள்ள போபம் ஏர்பீல்ட் அருகே செல்கையில் மோசமான வானிலை காரணமாக லெவிஸ் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்றார்.
அப்போது விமானம் விபத்துக்குள்ளாகி புல்வெளியில் தலைகீழாக விழுந்தது. இதில் லெவிஸ் மற்றும் சாலி ஆகியோர் பலியாகினர். ஜார்ஜ் படுகாயம் அடைந்து சுயநினைவை இழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜார்ஜை மீட்டு விமான ஆம்புலன்ஸ் மூலம் சவுத்ஹாம்ப்டனில் உள்ள ஜெனரல் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஜார்ஜ் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.