நாடகம், போட்டிகள் என துபாயில் களைகட்டிய குழந்தைகள் தின விழா
துபாய்: நவம்பர் 13ம் தேதி அன்று துபாய் இந்திய தூதரக அரங்கத்தில் குழந்தைகள் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வேவ் ரெசொனன்ஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் திரளாக வந்திருந்து கலந்து கொண்டனர்.

சுதா விஜயகுமார், திவ்யா சம்பா மற்றும் பிரஷாந்தி ஆகியோர் கலகலப்பாக நிகழ்சிகளை தொகுத்தளித்தனர். இந்த விழாவில் அமீரக இந்தியக் குழந்தைகளின் கலை மற்றும் தனித்திறன் நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடைபெற்றன. மேலும் மும்பையில் இருந்து வந்திருந்த பதினேழு குழந்தைகளின் இரு நாடகங்களும் நடைபெற்றது.

பார்வையாளர்களின் பெரு வரவேற்பையும், ஆதரவையும் பெற்ற இரு நாடகங்களும் வெகுவாக ரசிக்கப்பட்டன. நாடகங்களைக் கண்டு களித்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கரவொலி அரங்கத்தை அடிக்கடி அதிரச் செய்தது.
நூற்று முப்பது நாடுகளின் தலைநகரங்களை சொல்லி அசத்திய நான்கு வயதே நிரம்பிய சிறுவன் ரித்விக்கின் அசாத்திய நினைவாற்றல் அனைவரையும் அதிசயிக்கச் செய்தது. சிறார்களுக்கான புகைப்பட போட்டியும், காணொளிப் போட்டியும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

குழந்தைகள் ஸ்ரீவித்யா, நிர்மிதா, புனித், விஷால் ஆகியோர் புகைப்பட மற்றும் காணொளிப் போட்டிகளில் முதல், இரண்டாம் பரிசுகள் வென்று பாராட்டுக்களைப் பெற்றனர். குழந்தைகள் ஸ்ரீராம் மற்றும் விவான் அனைவரின் அபிமானத்தையும் பெற்றனர்.
விழா ஏற்பாட்டாளர்கள் ரமேஷ் பாபு ராவெல்லா, கீதா ரமேஷ் மற்றும் உமா ஆகியோர் இயக்குனர் துலாவர், தயாரிப்பாளர் மனஸ் விலாஸ் ஆகியோரை சிறப்பு செய்து நினைவுப் பரிசு வழங்கினர்.

பார்வையாளர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் மாலை சிற்றுண்டியும், தேநீரும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வயதை மறந்து, வருடங்கள் பின்சென்று வந்திருந்தோர் அனைவரும் குழந்தைகளாக குதூகலித்து இன்புற்றிருந்த மாலை வேளையின் இனிய கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்தேறியது.












Click it and Unblock the Notifications