இந்தியாவை சீண்டும் சீனா? லடாக் எல்லையில் ராணுவ தளம் கட்டி வரும் ஜி ஜின்பிங்.. மீண்டும் பதற்றம்
பெய்ஜிங்: கிழக்கு லடாக்கின் அருகே எல்லையில்அமைந்துள்ள சர்ச்சைக்குரிய பாங்காங் ஏரிப்பகுதியில் சீனா தனது ராணுவ கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருவதை சாட்டிலைட் போட்டோக்கள் உறுதி செய்துள்ளன. 2020ல் லடாக்கில் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு இப்போது தான் இருநாடுகள் இடையேயான உறவு மேம்பட்டு வரும் நிலையில் இந்த கட்டமைப்புகள் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சனை உள்ளது. நமக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசம், லடாக் உள்பட சில இட்களை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அந்த வகையில் 1962ம் ஆண்டு நடந்த இந்தியா - சீனா போருக்கு பிறகு லடாக்கில் சில இடங்கள் சர்ச்சைக்குரியதாக உள்ளன.

அதில் ஒன்று தான் பாங்காங் டிசோ என்ற பாங்காங் ஏரி. இந்த ஏரியின் மொத்த நீளத்தில் ஏறக்குறைய 50 சதவீதம் சீனா நிர்வகிக்கும் திபெத்திலும், 40 சதவீதம் நம்நாட்டின் லடாக் பிரதேசத்திலும் உள்ளது. மீதமுள்ள 10 சதவீத இடம் தான் சர்ச்சைக்குரியதாக உள்ளது.
இந்நிலையில் தான் பாங்காங் ஏரியில் இருந்து சில மீட்டர் தூரத்திலேயே சீனா புதிய கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. இது செயற்கைகோள் படங்கள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் தற்போது சீனா ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் ராணுவ தளமாக அது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சீனா தனது ராணுவ வீரர்களை தங்க வைக்கவும், படகு போக்குவரத்து கண்காணிப்பபை மேம்படுத்த புதிய கட்டுமானங்களை கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த இடத்தில் இதற்கு முன்பு 2013ல் சீனா சாலைகளை உருவாக்கியது. அது இருதரப்புக்கும் ரோந்து பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் 2020ம் ஆண்டில் மே மாதம் லடாக் எல்லையில் இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த சாலையை பயன்படுத்த நம் நாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நம் நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 2020ம் ஆண்டில் லடாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக இருநாடுகள் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. பிரதமர் மோடி அதன்பிறகு சீனாவுக்கு செல்லாமல் இருந்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முதலாக பிரதமர் மோடி கடந்த ஆண்டு சீனா சென்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அதன்பிறகு இருநாடுகள் இடையேயான உறவு மேம்பட்டது. இருநாடுகள் இடையே நிறுத்தப்பட்ட நேரடி விமான போக்குவரத்தும் தொடங்கப்பட்டது.
இப்படியான சூழலில் தான் மீண்டும் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியையொட்டி சீனா கட்டுமானங்களை மேற்கொண்டு வருவது இருநாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.












Click it and Unblock the Notifications