உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ்... முதலில் பதிவானது எங்கள் நாட்டில்...சீனா வாதம்!!
பீஜிங்: கொரோனா வைரஸ் தொற்று கடந்தாண்டு உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டு இருந்தது. ஆனால், சீனாவில் முதன் முதலில் இந்த தொற்று பதிவாகி இருந்தது என்று சீனா தெரிவித்துள்ளது. மேலும் முதன் முதலில் வுகானில் இருந்து இந்த தொற்று உருவாகி இருந்தது என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டையும் மறுத்துள்ளது. வுகானில் இருக்கும் சந்தையில் இருந்து இந்த வைரஸ் தொற்று பரவியதாகவும், சீனர்கள் சாப்பிடும் வௌவால் மற்றும் எறும்பு தின்னியிடம் இருந்து பரவியது என்றும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இவற்றையும் சீனா மறுத்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறுகையில், ''கொரோனா வைரஸ் புதிய வைரஸ். இது கடந்தாண்டு உலகத்தின் பல்வேறு நாடுகளில் தோன்றியுள்ளது. ஆனால், சீனாவில்தான் இந்த தொற்று முதன் முதலில் பதிவானது. இதையடுத்து இந்த மரபணுவை உலகத்துடன் சீனா பகிர்ந்து கொண்டது'' என்று தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என்பதை மறைக்க அந்த நாடு முயற்சித்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்து இருந்த நிலையில் சீனா பதில் அளித்துள்ளது. டோக்கியோவில் நடந்த குவாட் கூட்டத்தில் பேசி இருந்த மைக், ''கொரோனா நெருக்கடி சீனாவால் உருவாக்கப்பட்டது'' என்று தெரிவித்து இருந்தார். இந்தக் கூட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கலந்து கொண்டு இருந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்க்கு 36 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு, 1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் இதுவரைக்கும் 7.6 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு, 2,12,000 லட்சம் பேர் உயிரிழந்து இருக்கின்றனர். சீனாவில் 90,736 பேர் பாதிக்கப்பட்டு, 4,739 பேர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications