35 வருடங்களுக்கு பிறகு ஒரு குழந்தை கொள்கைக்கு சீனா முற்றுப்புள்ளி! 2 குவா, குவாக்களுக்கு ஓ.கே
பீஜிங்: 35 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒரேயொரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளும் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள சீனா, இப்போது 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதியளித்துள்ளது.
சீனாவின் இந்த கொள்கை மாற்றம் பற்றி அரசின் ஜினுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
உலகிலேயே அதிகம் மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. இதனால் அங்கு ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டம் 35 வருடங்களுக்கு முன்பு கட்டாயமாக்கப்பட்டது.
இதனால், அந்த நாட்டின் பொருளாதாரம் கிடுகிடுவென வளர்ந்து உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக மாறியது. அதேநேரம், நல்ல செயல்களில் சில பின்விளைவுகளும் இருக்கும் என்பதைப்போல இதிலும் ஒரு சிக்கல் எழுந்தது.
வயதானவர்கள் சீனாவில் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆண்-பெண் பாலின விகிதாச்சாரத்தில் கடுமையான ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது. இளைஞர்கள் குறைந்துவிட்டதால், நாட்டில் உழைக்கும் சக்தி பெருமளவு குறைந்து வருகிறது.
இப்பிரச்சினை குறித்து, சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 4 நாட்களாக தலைநகர் பெய்ஜிங்கில் கூட்டம் நடத்தி விவாதித்தது. இதில் சீன பொருளாதார வளர்ச்சி சரிவடையும் வாய்ப்பு பற்றி ஆய்வாளர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இதனையடுத்து, ஒரு குழந்தை கொள்கைக்கு முடிவு கட்ட முடிவு செய்யப்பட்டது. இனிமேல் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். அவர்களுக்கு அனைத்து அரசு சலுகைகளும் தரப்படும்.
2013ம் ஆண்டில், குறைந்த அளவில் சலுகைகள் அளிக்கப்பட்டு, நகர்ப்புற தம்பதியினர் மட்டும் 2வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நிறைய பேர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.