அருணாச்சல பிரதேசத்தில் மோடி.. அலறும் சீனா
பீஜிங்: சீனா சொந்தம் கொண்டாடும் பகுதியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்றதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை தங்கள் நாட்டின் ஆளுமைக்கு உட்பட்ட திபெத்தின் தெற்கு பகுதி எல்லை என்று கூறி சீன அரசு சொந்தம் கொண்டாடுகிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா உயர்மட்ட அதிகாரிகளிடையே இதுவரை 21 சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் தீர்வுதான் எட்டப்படவில்லை.
அருணாச்சல பிரதேசம் சென்ற மோடி
எனவேதான், அருணாச்சலப்பிரதேச மாநிலத்துக்கு இந்திய அரசியல் தலைவர்கள் செல்லும் போதெல்லாம் சீன அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அதிலும், சாட்சாத், பிரதமரான நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசத்திற்கு சென்றால், என்னவாகும். வெந்நீரை காலில் கொட்டியதை போல கதறுகிறது சீனா.அருணாச்சல பிரதேசத்தில் நலத்திட்டங்கள்
அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் இட்டாநகர் அருகே புதிய பசுமை விமான நிலையத்துக்கு இன்று நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டினார். மேலும், 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டியுள்ளார். சும்மா போனாலே குதிக்கும் சீனாவிற்கு, இத்தனை நலத்திட்டங்களை இந்திய பிரதமர் துவக்கி வைத்ததால், பேதியே போய்விட்டது.
சீனா எரிச்சல்
இதை சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங் வழியாக வெளிக்காட்டியுள்ளது சீனா. தங்கள் நாட்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வந்து செல்வதுபோல் அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய தலைவர்கள் வந்து செல்கிறார்கள். இதுபற்றி எங்களது கவனத்துக்கு அவ்வப்போது கொண்டு வரப்பட்டுள்ளது.
மீண்டும் பதற்றம்
சீனாவின் எல்லையில் உள்ள இப்பகுதி தொடர்பான விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு தொடர்ந்து உறுதியாக உள்ளது. அருணாச்சலப்பிரதேசம் என்று ஒரு பகுதியை சீனா எப்போதுமே அங்கீகரித்தது கிடையாது. இருநாடுகளுக்கு இடையிலான பொது விவகாரங்களை கருத்தில் கொண்டும், சீன அரசின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், இதுபோன்ற செயல்களில் இருந்து இந்திய தலைவர்கள் ஈடுபட கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். டோக்லாம் பகுதியில், இந்தியா-சீன ராணுவம் மோதலுக்கு தயாராகி, பின்னர் ராஜாங்க ரீதியில் பதற்றம் தணிக்கப்பட்டது. இப்போது மோடியின் அருணாச்சல பிரதேச வருகையால், மீண்டும், இரு நாடுகளுக்கும் உரசல் ஏற்பட்டுள்ளது.