போனைப் போட்ட சீனா.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அஜித் தோவல்! போர் நிறுத்தத்தை வலியுறுத்தியதாக தகவல்
டெல்லி: சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தோவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தியா பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே கடந்த இரண்டு நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் மாலை 5 மணி முதல் தாக்குதல் முடிவுக்கு வந்ததாக இரு நாடுகளும் பரஸ்பரம் அறிவித்தன.
இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் திடீரென ஜம்மு, காஷ்மீர், ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்கள் பறந்து வந்தன. இந்திய பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை தாக்கி அழித்தன. போர் நிறுத்தம் அறிவித்து நான்கு மணி நேரத்தில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி இருப்பது கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தோவல் தெரிவித்ததாகவும், இந்தியா பயங்கரவாதத்தை எதிர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதையும், போர் இந்தியாவின் விருப்பம் அல்ல என்றும், எந்த தரப்பிற்கும் அதில் நன்மை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு தரப்பும் போராட விரும்பவில்லை, அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலைநிறுத்த விரும்புகிறார்கள் என அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, பஹல்காம் தாக்குதலை சீனா கண்டிப்பதாகவும், அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் சீனா எதிர்க்கிறது என்றும் கூறினார்.
தற்போதைய சர்வதேச சூழல் கடுமையாக மற்றும் சிக்கலானதாக உள்ளது. ஆசியப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பேணுவது மிக முக்கியம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டும் சீனாவின் அண்டை நாடுகள், அவை இடம்பெயர முடியாத அண்டை நாடுகள் என்பதையும் அவர் நினைவு படுத்தியுள்ளார்.
மேலும், போர் என்பது இந்தியாவின் விருப்பம் அல்ல என்று இந்தியா கூறியதற்கு சீனா பாராட்டுத் தெரிவித்தது. இரு நாடுகளும் அமைதி, தெளிவு மற்றும் முறையான பேச்சுவார்த்தையின் மூலம் மோதலைத் தவிர்க்க வேண்டும் என்றும், மாறாக நீடித்த மற்றும் நிரந்தரமான போர் நிறுத்தத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியதாக சீன வெளி விவகாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications