ஸ்டெம்செல்தெரபி மூலம் நெற்றியில் வளர்ந்த ‘புதிய மூக்கு’: சீன மருத்துவர்கள் சாதனை
பெய்ஜிங்: சீனாவில், விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, மூக்கில் பாதிப்பு ஏற்பட்ட நோயாளியின் உடலில், "ஸ்டெம்செல் தெரபி' முறையில், புதிய மூக்கை, சீன மருத்துவர்கள் சாதனைப் புரிந்துள்ளனர்.
ஒருவகைக் குறிப்பிட்ட பல்லி இனத்திற்கு மட்டுமே இழந்த உறுப்புகளை மீண்டும் வளர்த்துக் கொள்ளும் விஷேச உடலமைப்பு உண்டு. அதனை முன்மாதிரியாக வைத்து மனிதர்களுக்கும், இழந்து போன உறுப்புகளை மீண்டும் வளர்க்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஸ்டெம்செல் தெரபி மூலம், சீனாவில் மூக்கில் பாதிப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவருக்கு அவரின் நெற்றியின் மீதே புதிய மூக்கு வளர்த்து சீன மருத்துவர்கள் மருத்துவ உலகில் புதியதொரு சாதனை புரிந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மூக்கு....
சீனாவைச் சேர்ந்த 22 வயது வாலிபரான ஜாவோலியன், கடந்த ஆண்டு, வாகனத்தில் சென்றபோது, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதில், இவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது.
மூக்கை அகற்ற ஆலோசனை....
நீண்ட நாட்களாக காயம் ஆறாததால், அதில், நோய் தொற்று உருவானது. இதனால், ஜாவோலியனுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும், நோய் தொற்று குணமாகாததால், அவரின் மூக்கை, அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட முடிவு செய்யப்பட்டது. அதே சமயம் நீக்கப்பட்ட இடத்தில், புதிய மூக்கை பொருத்தவும் அவர்கள் திட்டமிட்டனர்.
ஸ்டெம்செல்தெரபி....
அதன்படி, ஜாவோலியின் உடலில் இருந்து பெறப்பட்ட செல்களின் மூலம், புதிய மூக்கை வளர்க்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். அவரது உடலில் இருந்து பெறப்பட்ட செல்கள், அவரது நெற்றிப் பகுதியில் வைத்து வளர்க்கப்பட்டது.
மூக்காக மாறிய கட்டி....
சில தினங்களிலேயே, நெற்றியில் பெரிய கட்டி ஒன்று உருவானது. அக்கட்டியை மருத்துவர்கள் சில அறுவை சிகிச்சைகள் மூலம் மூக்காக வடிவமைத்துள்ளனர்.
நிஜ மூக்காக...
தற்போது, நோயாளியின் நெற்றியில் 'ஸ்டெம்செல்' சிகிச்சை முறையில் வளர்க்கப்பட்டுள்ள மூக்கு உள்ளது. இன்னும் சில தினங்களில், அறுவை சிகிச்சை மூலம், அந்த மூக்கை நிஜ மூக்கை நீக்கி விட்டு பொருத்தப் போவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.