வெள்ளத்தில் ஷூ நனைந்து விடக்கூடாது... உதவியாளரின் முதுகில் ஏறி சவாரி செய்த சீன அதிகாரி டிஸ்மிஸ்!
பெய்ஜிங்: வெள்ள நீரில் நனைந்து தனது ஷூ பாழாகி விடக் கூடாது என்பதற்காக உதவியாளரின் முதுகில் ஏறி பயணம் செய்த சீன உயரதிகாரி டிஸ்மிஸ் செய்யப் பட்டுள்ளார்.
சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜியாங்ஸி மாகாணம் குயிக்சி நகரில் கனமழைக்கு இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்.
எனவே, அப்பகுதியின் வெள்ள சேதத்தை பார்வையிட சீன உயரதிகாரி வாங்க் ஜூங்கு சென்றிருந்தார். ஒருகட்டத்தில் நீர் நிறைந்த பகுதியைக் கடக்க வேண்டியதாயிற்று. நீரில் இறங்கினால் தனது விலைமதிப்புள்ள ஷூவுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கருதிய வாங்க், தனது உதவியாளரிடம் தன்னை முதுகில் சுமந்து நீரைக் கடக்குமாறு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலதிகாரியின் கட்டளையை தட்ட முடியாத, அந்த உதவியாளரும் வாங்க்கை தனது முதுகில் தூக்கிச் சென்று நீரைக் கடந்துள்ளார்.
இந்தக் காட்சியை அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் புகைப்படமாக எடுத்து ஊடகங்களுக்கு கொடுத்துள்ளார். ஊடகங்களில் வெளியான இப்படத்தால் சர்ச்சை உண்டானது.
உதவியாளரை அடிமை போன்று உயரதிகாரி தூக்கச் சொன்னது அரசின் கவனத்திற்குச் சென்றதாகவும், அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது டிஸ்மிஸ் செய்யப் பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.