விபத்தில் காயம்... ஆம்புலன்ஸ் வரும் வரை ரோட்டில் படுத்து டிக்ஸ்னரி படித்த சீன மாணவி
பீஜிங்: சீனாவில், விபத்தில் காயமடைந்த இளம்பெண் ஒருவர் ஆம்புலன்ஸ் வரும்வரை நேரத்தை வீணாக்க விரும்பாமல் ரோட்டிலேயே படுத்து டிக்ஸ்னரி படித்ததை போலீசார் உட்பட பொதுமக்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
சீனாவின் தலைநகர் பீஜிங் சாலையொன்றில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார் வாங் டாபன் என்ற 18 வயது இளம்பெண். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானார் வாங்.
விபத்தில் வாங்கின் கால் மற்றும் தோளில் ஏற்பட்ட காயத்தால் அவரால் எழுந்து நிற்க இயலவில்லை. இதனால் சாலையில் படுத்தபடியே உடனடியாக தனது செல்போனிலே ஆம்புலன்சுக்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்தார் வாங்.
ஆம்புலன்ஸ் வருவதற்கு ஆகும் சில நிமிடங்களைக் கூட வீணாக்க விரும்பாத வாங், விபத்து நடந்த இடத்திலேயே படுத்து கொண்டு தான் கொண்டு வந்திருந்த டிஜிட்டல் டிக்சனரியை எடுத்து படிக்க தொடங்கினார். பதட்டப்படாமல் செயல்பட்ட மாணவியின் செயலை சுற்றி நின்றிருந்தவர்கள் வியப்புடன் வேடிக்கை பார்த்தனர்.
பின்னர், ஆம்புலன்ஸ் வந்ததும் வாங் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப் பட்டது.
விபத்து தொடர்பாக வாங் கூறும்போது, 'வாழ்க்கை காலம் மிகவும் சிறியது. அந்த வாழ்க்கையில் நேரத்தை வீணாக்காமல் கல்வி பயில வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்றார். மேலும் வலி தெரியாமல் இருக்க மனதை வேறு பக்கம் திருப்ப தனக்கு கல்வி உதவியதாகவும், அந்த சில நிமிடங்களில் தான் புதிதாக 107 ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது கேப்பிடல் நார்மல் யுனிவர்சிட்டியில் படித்து வரும் வாங்கிற்கு எதிர்காலத்தில் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் சேர்ந்து படிக்க விரும்புவது தான் ஆசையாம்.
சம்பவத்தை நேரில் பார்த்த போலீஸ் ஒருவர் கூறுகையில், ‘எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது அம்மாணவியைப் பார்க்கும் போது. விபத்துக் காரணமாக வலியால் அவதிப் பட்டபோதும், அவர் நிதானமாக டிக்ஸ்னரியில் உள்ள புதிய வார்த்தைகளை மனப்பாடம் செய்து கொண்டிருந்தார்' என வியப்புடன் தெரிவித்துள்ளார்.