கொரோனா முன்னெச்சரிக்கை- சிக்கிமில் பிற மாநிலத்தவர் நுழைய தடை- இன்னர் லைன் பெர்மிட் ரத்து
கேங்டாங்: கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற மாநிலத்தவர் உள்ளே நுழைவதற்கான இன்னர்லைன் பெர்மிட் வழங்கும் முறையை 30 நாட்களுக்கு ரத்து செய்வதாக சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டுவித்து வருகிறது. சீனாவில் 3,000 பேரை பலி கொண்டிருக்கும் கொரோனா, பிற நாடுகளையும் தாக்கி வருகிறது.
இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க அதிதீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா தாக்குதல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிக்கிம் மாநில அரசு பிற மாநிலத்தவர் நுழைவதற்கான இன்னர் லைன் பெர்மிட்டை 30 நாட்களுக்கு ரத்து செய்திருக்கிறது.
கொரோனா தாக்குதலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சிக்கிம் அரசு தெரிவித்திருக்கிறது. மேலும் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இருந்து சிக்கிம் மாநிலத்தவரை மட்டுமே அம்மாநில பேருந்துகள் அழைத்துச் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள், 2 நாள் அல்ல.. மார்ச் 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை.. கொரோனா பீதியால் டெல்லி அரசு அறிவிப்பு
மேலும் சிக்கிம் மாநிலத்துக்கு வருகை தந்த பிற மாநில பயணிகள் 4.06 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யாருக்கும் கொரோனா தாக்குதல் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் ஜப்பான், சீனா, நேபாளில் இருந்து வந்த 14 சுற்றுலா பயணிகளும் அடங்குவர். சிக்கிம் மாநிலத்துக்குள் நுழையும் இடங்களில் சோதனைச் சாவடிகளிலேயே அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் சிக்கிம் அரசு கூறியுள்ளது.