கொரோனாவால் தினமும் செத்துக்கொண்டிருக்கும் மக்கள்! சீன அதிபர் ஜின்பிங் எங்கே?
Recommended Video
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை காணவில்லை. அவர் ரகசிய இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதில் கொரானா வைரஸ் தாக்க ஆரம்பித்து, அதன்பிறகு கடந்த மாத சந்திரப்புத்தாண்டின் போது மக்களிடம் வேகமாக பரவ ஆரம்பித்தது. இது வரை கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அதிகாரப்பூர்வமாக 871 பேர் வரை இறந்திருக்கிறார்கள். 40,710 பேர் இன்று காலை வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று ஒரே நாளில் 3062 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
முன்பு சீனாவை தாக்கிய சார்ஸ் நோயால் 774 பேர் தான் இறந்தார்கள். 8000 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது 40 ஆயிரம் பேருக்கு மேல்பாதிக்கப்பட்டுள்ளார்கள். சுமார் 1000 பேர் வரை இறந்து விட்ட நிலையில், கொரோனா வைரஸின் தாக்கல் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் சீன அரசு திணறி வருகிறது.
கடைசியாக பேசியது
இந்த சூழலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் குறித்து எந்த தகவலும் ஒரு மாதமாக இல்லை. அவர் கடைசியாக ஜனவரி மாதம் புத்தாண்டு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், சீனாவில் ஒவ்வொருவரும் மாபெரும் சகாப்தத்தில் வாழ்வதில் பெருமை கொள்ள வேண்டும். எந்த சூறாவளியாலும் நமது முன்னேற்றம் தடைபடாது என்றார். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து எதுவுமே அவர் பேசவில்லை. கொரோனா பரவுவதை தடுக்க வுகான் நகரின் எல்லைகள் மூடப்படுவதாக மட்டும் அறிவிப்பு வெளியிட்டார்.
கலந்து கொள்ளவில்லை
அதற்கு பிறகு அதிபர் ஜி ஜின்பிங் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. கொரோனா பாதிப்புகள் குறித்தும் எந்தவிதமாக அறிக்கைகளோ, பேட்டிகளோ அவர்கள் அளிக்கவில்லை. அவர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
பொருளாதார பாதிப்பு
சீனா இதுவரை இல்லாத ஒரு சவாலை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு , அதனால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, ஹாங்காங் போராட்டம், அமெரிக்காவின் நெருக்கடி, தைவான் தேர்தல் என சீன கடும் சவாலை சந்தித்து வருகிறது. இந்த சவால்களை தலைமையேற்று எதிர்கொள்ள வேண்டிய அதிபர் ஜி ஜின்பிங் தற்போது எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்றே யாருக்கும் தெரியவில்லை.
சர்வாதிகாரி
சீனாவில் ஒரு கட்சி ஆட்சி நடைமுறையில் உள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் 7 ஆண்டுகளாக அதிபராக உள்ளார். நாட்டின் அனைத்து அதிகாரமும் நிரம்பிய தலைவரான ஜி ஜின்பிங் சர்வாதிகாரியாகவே இருந்து வருகிறார். ஒற்றை தலைமை முடிவு என்பது ஆபத்தானது என்பது கொரோனா பாதிப்புக்கு பின்பே தெரியவந்துள்ளது. அவருடைய நிர்வாக செயல் திறன் மீதுஅதிருப்தி ஏற்பட்டுள்ளது.
எங்கே இருக்கிறார்
பொதுமக்கள் என்ன செய்து கொரோனாவில் இருந்து தப்பிப்பது என்று பரிதவித்து வரும் நிலையில் ஜி ஜின்பிங்கை காணவில்லை. அவர் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக ரகசிய இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் எந்த இடம் என்பது குறித்து தகவல் இல்லை.