மருத்துவ துறையில் உன்னதத்தை எட்டிய கியூபாவில் 21 பேருக்கு கொரோனா- ஒருவர் பலி- 716 பேருக்கு பரிசோதனை
ஹவானா: மருத்துவ துறையில் உன்னதத்தை எட்டியிருக்கும் சின்னஞ்சிறிய கம்யூனிச நாடான கியூபாவில் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் கியூபாவில் உயிரிழந்துள்ளார். மேலும் கொரோனா அறிகுறிகளுடன் 716 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உலகிலேயே மருத்துவ துறையில் மிகவும் முன்னோடி நாடாக திகழ்கிறது கியூபாதான். கம்யூனிச புரட்சியில் பிறந்த சோசலிச கியூபாதான் வல்லரசு நாடுகளுக்கே மருத்துவத் துறையில் வழிகாட்டியாக திகழ்கிறது.
கொரோனா தாக்கத்தால் பல நூறு பயணிகளுடன் தத்தளித்த இங்கிலாந்து கப்பலை தங்களது தேசத்துக்குள் அனுமதித்து மருத்துவ உதவிகள் செய்து கம்யூனிசத்தின் மறுமுகமான மாந்தநேயத்தையும் முரட்டு தேசங்களின் கன்னங்களில் அறைந்து சொன்னது கியூபா. இப்போது கியூபாவில் கொரோனாவை தடுக்க படுதீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கியூபாவில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 10 பேர் வெளிநாட்டவர். கொரோனாவுக்கு இத்தாலியை சேர்ந்த ஒருவர் கியூபாவில் உயிரிழந்துள்ளார். கொரோனா அறிகுறிகளுடன் 716 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமூக இடைவெளிகளை மேற்கொள்ளுதல், பொது இடங்களில் ஒன்றுகூடுதலை தவிர்த்தல் ஆகியவற்றை நாட்டு மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கியூபா அதிபர் டியாஸ் கெனல் வலியுறுத்தியுள்ளார். அண்டை நாடுகளின் எல்லைகளை மூடுதல், விமான போக்குவரத்து கட்டுப்பாடு ஆகியவற்றையும் கியூபா அமல்படுத்தியுள்ளது.
மேலும் கொரோனா பாதித்த இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு கியூபாவின் மருத்துவ குழுவினர் உதவிக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.