அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா கைவரிசை? அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மூத்த மகன் வாக்குமூலம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு முன்னிலையில் அந்த நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகன், ஆஜராகி விளக்கம் அளித்தார்.
2016ம் ஆண்டு நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் முன்னிறுத்தப்பட்டார். குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். ஆனால் இந்த வெற்றியில் பல சந்தேகங்கள் எழுந்தன.

சந்திப்பு
ரஷ்யா இந்த தேர்தலில் தலையிட்டதாகவும், தேர்தல் முடிவுகளை மாற்றியமைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக ரஷ்ய விஞ்ஞானி ஒருவரைச் சந்தித்துப் பேசியதாக அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் ஒப்புக் கொண்டது இன்னும் அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

விசாரணை
இந்தச் சந்திப்பின்போது, ட்ரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னரும், ட்ரம்பின் பிரச்சாரக்குழுத் தலைவர் பால் மேனஃபோர்ட்டும் இருந்ததாக நியூயார்க் டைம்ஸ் இதழ் குறிப்பிட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

நேரில் ஆஜரான அதிபர் மகன்
இதுகுறித்து விசாரிக்க அமெரிக்க செனட் உளவு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டி முன்னிலையில், டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் ஆஜராகினார். 9 மணி நேரமாக அவர் வாக்குமூலம் அளித்தார்.

ரஷ்யா மறுப்பு
ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா ஏற்கனவே மறுத்திருந்தது. இருப்பினும் ட்ரம்பின் வெற்றி பலரும் எதிர்பார்க்காத வகையில் இருந்ததால் இந்த விசாரணை முக்கியத்துவம் பிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications