உலகத்திலேயே பெரிய 'பிராடு' சீனாதான்... டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை - மெக்சிகோ மீதும் பாய்ச்சல்!!
பீட்ஸ்பர்க்: அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையை சீனா திருடுவதாக அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.
பீட்ஸ்பர்க் நகரில் தமது ஆதரவாளர்களிடையே டொனால்ட் ட்ரம்ப் பேசியதாவது:
அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிகப்படியான வரிகளை சீனா விதிக்கிறது. அமெரிக்காவில் தம்முடைய பொருட்களைக் குவித்துவிட்டு அறிவுசார் சொத்துரிமையை சீனா திருடுகிறது. சீனாதான் மிகப் பெரிய மோசடி நாடாக இருக்கிறது.
அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் பொருட்களுக்கு சீனாவின் விதிக்கப்படும் வரி ஏற்கக் கூடியதல்ல. தாம் அமெரிக்கா அதிபரானால் அமெரிக்காவில் சீனாவின் பொருட்களுக்கு கடும் வரிகள் விதிக்கப்படும்.
அமெரிக்க கண்டத்தில் குட்டி சீனாவாக மெக்சிகோ நாடு செயல்பட்டு வருகிறது. சுதந்திரமான வர்த்தக கொள்கையைதான்நான் நம்புகிறேன்.
ஒபாமாவுக்கு சீனா மரியாதை அளிப்பதில்லை... ஒபாமாவும் திறமையற்றவர். ஒபாமாவை விட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் குறித்து மோசமான அபிமானம்தான் எனக்கு இருக்கிறது. இந்த நாட்டை பிளவுபடுத்தியவர் ஒபாமாதான். இதற்கு முன்னர் ஒருபோதும் இந்த நாடு பிளவுபட்டு கிடந்தது இல்லை.
ஏழைகளையும், பணக்காரர்களையும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி ஒன்றிணைப்பேன். நம்மால் நிச்சயம் மாற்றத்தை உருவாக்க முடியும்.
இவ்வாறு டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.