ரஷ்யாவுக்கு போகும் பவர்! காரணம் டிரம்பின் சீக்ரெட் டீல்? உக்ரைன் நிலைமை பரிதாபமாகிவிடும்! வார்னிங்
சவுதி: உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினர். இதில் உக்ரைன் இடம்பெறாதது சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. இதற்கிடையே உக்ரைன் விவகாரத்தில் டிரம்பின் முன்மொழிந்துள்ள டீல் சிக்கலை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாகவே மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் முயன்ற போதிலும் அதற்குப் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை.

உக்ரைன் மோதல்
இதற்கிடையே அமெரிக்காவின் அதிபராகக் கடந்த மாதம் பதவியேற்ற டிரம்ப் போர் நிறுத்துவதில் கவனம் செலுத்து வருகிறார். அவர் பதவியேற்க சில நாட்களுக்கு முன்பு தான் மத்திய கிழக்கில் நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்தது. அடுத்த கட்டமாக ரஷ்யா உக்ரைன் மோதலையும் முடிவுக்குக் கொண்டு வருவதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
அதன்படி சமீபத்தில் உக்ரைன் மோதல் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து போர் நிறுத்தம் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு டீம் அமைக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. இருப்பினும், இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அழைக்கப்படாதது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளிப்படையாகவே இதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தார். ஐரோப்பியத் தலைவர்களும் கூட டிரம்பின் நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை என்றே தெரிகிறது. இந்த ஒப்பந்தத்தில் 4 முக்கிய பாயிண்டுகள் உள்ளன.
டீல் என்ன
முதலில் கடந்த 2014 முதல் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா தான் கட்டுப்படுத்தி வருகிறது. அந்த பிராந்தியங்களை முழுமையாக ரஷ்யாவுக்கு வழங்க வேண்டும் என்பது முதல் கண்டிஷன். அடுத்து ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஒரு ராணுவம் இல்லாத மண்டலம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த ஏரியாவில் உக்ரைன் படைகளும் வரக்கூடாது. ரஷ்யப் படைகளும் வரக்கூடாது. அவ்வளவு ஏன் நேட்டோ படைகளுக்கும் கூட அனுமதி இல்லை. ஐரோப்பிய அமைதி காக்கும் படை மட்டுமே இங்குக் கண்காணிப்பு பணிகளைச் செய்ய வேண்டும்.
நாம் அனைவருக்கும் தெரியும் உக்ரைன் நேட்டோவில் இணையும் முயற்சியை எடுத்த போது தான் ரஷ்யா ஆத்திரம் கொண்டு இந்தத் தாக்குதலைத் தொடங்கியது. வரும் காலங்களில் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதைத் தடை விதிக்க வேண்டும் என்பதும் கூட ஒப்பந்தத்தில் முக்கியமான விஷயமாக இருக்கிறது.
சர்ச்சை
அடுத்து கடைசி பாயிண்ட் தான் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது உக்ரைன் என்பது பல இயற்கை வளங்களைக் கொண்ட நாடாகும். லித்தியம் உள்ளிட்ட பல அரிய தாதுகள் இங்கு அதிகளவில் கிடைக்கும். இத்தனை காலம் உக்ரைனுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வந்த நிலையில், அதற்குப் பதிலாக இந்த பிராந்தியங்களின் கட்டுப்பாட்டை அமெரிக்கா வசம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார் டிரம்ப். இதை ஏற்கவே முடியாது என்று ஜெலன்ஸ்கி தரப்பு மறுப்பு தெரிவித்து வருகிறது.
ரஷ்யாவின் பவர் அதிகரிக்கக்கூடும்
இது ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வரும் 2030 வரை உக்ரைனுக்கு ஆண்டுதோறும் 3 பில்லியன் பவுண்டுகள் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். பிரிட்டன், பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு பக்கபலமாக இருந்தால் அமெரிக்காவின் ஆதரவு இல்லை என்றால் அது சிக்கலையே தரும்.
எல்லாம் சரியாகப் போனால் போர் நிறுத்தம் வரலாம். ஆனால், அது உக்ரைனைப் பலவீனப்படுத்தும். மேலும், ரஷ்யாவின் அதிகாரத்தை அப்பகுதியில் குவிப்பதாகவே இருக்கும். இதன் காரணமாகவே டிரம்பின் இந்த சீக்ரெட் டீல் பெரும் சர்ச்சையைக் கிளப்புவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications