இஸ்ரேல்: இனவெறிக்கு எதிராக எத்தியோப்பியா யூதர்கள் போராட்டம்- போலீசாருடன் மோதல்!!
டெல் அவிவ்: இஸ்ரேல் போலீசார் இனவெறியுடன் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டி டெல் அவிவ் நகரில் எத்தியோப்பிய யூதர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் பல போராட்டக்காரர்களும் போலீசாரும் படுகாயமடைந்தனர்.
எத்தியோப்பியா வாழ் யூதர்களே பைபிளில் குறிப்பிடப்படும் யூத பழங்குடியினராக கருதப்படுகின்றனர். இவர்கள் எத்தியோப்பியாவில் இருந்து 1980,90களில் இஸ்ரேலுக்கு நாடு கடத்தப்பட்டனர். தற்போது இஸ்ரேலில் சுமார் 1,35,000 எத்தியோப்பிய யூதர்கள் வசிக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் வறுமையில் வாடுகிறவர்கள்.. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள்.. இந்த எத்தியோப்பியர்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் அரசு கட்டாய கருத்தடை ஊசியைப் போட்டது சர்ச்சையை கிளப்பியிருந்தது.
மேலும் இஸ்ரேல் அரசு தொடர்ந்து இனவெறியுடன் நடந்து கொள்வதாகவும் எத்தியோப்பிய யூதர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கருப்பின ராணுவ வீரர் ஒருவரை போலீசார் தாக்கும் வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகி இருந்தது.
இதனைக் கண்டித்து டெல் அவிவ் நகரில் நேற்று எத்தியோப்பிய யூதர்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். தங்களை இஸ்ரேல் அரசு ஒடுக்குவதாக குற்றம்சாட்டி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தை ஒடுக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பலர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து எத்தியோப்பியா யூதர்கள் வாழும் பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications