நியூசிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் ஈழத் தமிழர் வனுஷி வால்டர்ஸ் வெற்றி- கொழும்பு முதல் மேயரின் பேத்தி!
வெலிங்டன்: நியூசிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான வனுஷி வால்டர்ஸ் வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளார். கொழும்பின் முதல் மேயராக இருந்த சரவணமுத்துவின் பேத்திதான் வனுஷி வால்டர்ஸ்.
நியூசிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது.
தேர்தல் களத்தில் ஈழத் தமிழர் வனுஷி
அந்த நாட்டின் பிரதமராக மீண்டும் ஜெசிந்தா ஆர்டர்ன் தேர்வு செய்யபட்டுள்ளார். இத்தேர்தலில் ஈழத் தமிழரான வனுஷி வால்டர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். நியூசிலாந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் தமிழர் என்ற பெருமையை பெற்றுள்ளார் வானுஷி வால்டர்ஸ்.
வனுஷி வால்டர்ஸ் வெற்றி
நியூசிலாந்தின் வடமேற்கு ஆக்லாந்தில் ஹாமில்டன் கிரிக்கெட் வீரர் ஜேக் பெசன்ட்டை எதிர்த்து போட்டியிட்டார் வானுஷி. பெசன்ட் 12,272 வாக்குகளையும் வானுஷி வால்டர்ஸ் 14,142 வாக்குகளையும் பெற்றார். இலங்கையில் இருந்து பெற்றோருடன் 5 வயதில் நியூசிலாந்தில் குடியேறியவர் வனுஷி வால்டர்ஸ்.
கொழும்பு முதல் மேயர் பேத்தி
இலங்கையில் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாகக் கொண்டவர் வனுஷி. இவரது தந்தை வழி பாட்டி லூசியா சரவணமுத்து, 1931-ல் இலங்கை அரசு பேரவையின் வடக்கு தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தாத்தா சரவணமுத்து, கொழும்பு முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பெயரில்தான் கொழும்பில் உள்ள விளையாட்டு அரங்கம் சரவணமுத்து விளையாட்டு மைதானமாக அழைக்கப்படுகிறது. வனுஷியின் தந்தை ஜனா ராஜநாயகம், தாயார் பவித்ரா. வால்ட்டர்ஸ் என்பவரை வனுஷி திருமணம் செய்து கொண்டார்.
மனித உரிமை வழக்கறிஞர்
சர்வதேச மன்னிப்புச் சபையில் முக்கிய பணியாற்றியவர். நியூசிலாந்தில் முதன்மையான மனித உரிமைகள் தொடர்பான வழக்கறிஞர். அவரது வெற்றியை ஈழத் தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.