நடந்தாவது வெளியேறுங்கள்! கார்கிவ் நகரிலுள்ள இந்தியர்களுக்கு ஒரு மணி நேரத்தில் தூதரகம் 2ஆவது வார்னிங்
கீவ்: உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்கள் நடந்தாவது வெளியேறிவிட வேண்டும் என்று இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் வியாழக்கிழமை உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்தது. உக்ரைன் எல்லையில் கடந்த சில வாரங்களாகவே ரஷ்யா தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
ஆனால், அதிபர் புதின் முழு வீச்சிலான போரைத் தொடங்குவார் என உண்மையில் யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால் தான் போர் அறிவிப்பு வந்ததும் உலக நாடுகள் ஸ்தம்பித்தன.

உக்ரைன் போர்
கடந்த வாரம் தொடங்கிய போர், 6 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. பிப். 27ஆம் தேதி இரு தரப்பும் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டன. அதன்படி மார்ச் 1இல் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது உக்ரைன் நாட்டில் உள்ள அனைத்து ரஷ்யப் படைகளும் உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், இதில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரியவில்லை.

தொடரும் தாக்குதல்
இதனால் போர் இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் 2ஆவது மிகப் பெரிய நகரமான கார்கிவ் நகரங்களைக் குறிவைத்து ரஷ்யத் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இன்றைய தினம் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையிலும் கூட ரஷ்யா தனது தாக்குதலைக் குறைத்ததாகத் தெரியவில்லை, முக்கிய நகரங்களில் குண்டு மழை பொழிந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எப்படியாவது வெளியேறுங்கள்
இதனால் அங்குள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களின் நிலை குறித்த அச்சம் எழுந்துள்ளது. இந்தச் சூழலில் கார்கிவ் நகரிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைன் நேரப்படி மாலை 6 மணிக்குள் கார்கிவ் நகரில் இருந்து வெளியேறி பிசோச்சின், பெஸ்லியுடோவ்கா & பாபேக் நகரங்களில் எதாவது ஒன்றுக்குச் செல்லுமாறு இந்தியர்களை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நடந்தாவது வெளியேறுங்கள்
இந்நிலையில், ஒரு மணி நேரத்தில் 2ஆவது முறையாக கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்கள் வெளியேற வேண்டும் என இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் நேரப்படி மாலை 6 மணிக்குள் (இந்திய நேரப்படி இரவு 9.30 ) கார்கிவ் நகரை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேருந்து, ரயில்கள் கிடைக்கவில்லை என்றால் நடந்தாவது கார்கிவ் நகரில் இருந்து வெளிறேறி பிசோச்சின், பெஸ்லியுடோவ்கா & பாபேக் நகரங்களை அடையுமாறு தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

சவால்
போர் தொடர்ந்து வருவதால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளில் சவால் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் எல்லையைக் கடந்து ருமேனியா, ஹங்கேரி வரும் மாணவர்களை வெளியுறவுத் துறை அமைச்சகம் பாதுகாப்பாக அழைத்து வருகிறது. இருப்பினும், இன்னும் கூட எல்லையைக் கடக்க முடியாத உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் சிரமமான சூழலே நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications