கூகுள் இல்லை, இன்ஸ்டா இல்லை! உலகில் இன்டர்நெட் இல்லாத நாடு.. நீங்க கற்பனை கூட செஞ்சு பார்க்க முடியாது
எரித்ரியா: இன்டர்நெட் இல்லையென்றால் இன்று உலகமே ஸ்தம்பித்துவிடும். இப்போது நாம் கிட்டத்தட்ட அப்படியொரு சூழலில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். வங்கிப் பரிவர்த்தனை முதல் ஆன்லைன் கல்வி வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட 21ஆம் நூற்றாண்டில், "இன்டர்நெட் என்றால் என்ன?" எனக் கேட்கும் ஒரு நாடு இப்போதும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
இந்த நவீன 21ம் நூற்றாண்டில் எல்லாமே இன்டர்நெட் தான்.. இணையம் வந்த பிறகே இங்குப் பல தொழில்கள் உருவாகியுள்ளது. இன்புளுயன்சர்கள், ஆன்லைன் உணவு டெலிவரி, ஆன்லைன் கல்வி என்று நாம் லிஸ்ட் போட்டுக் கொண்டே போகலாம்.. இப்படிப் பல தொழில்கள் இணையத்தை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டு இருக்கிறது. நமது வாழ்க்கையில் கிட்டத்தட்ட அடிப்படைத் தேவையாக இணையம் மாறிவிட்டது.

இன்டர்நெட் இல்லை
ஆனால், இன்னுமே ஒரு நாட்டில் இன்டர்நெட் இல்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. அது தான் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எரித்திரியா(Eritrea) தான் அந்தத் தனித்தீவு.! உலகமே 5G வேகத்தில் பறந்து கொண்டிருக்கும்போது, எரித்ரியா மட்டும் இன்னும் 18ஆம் நூற்றாண்டிலேயே உறைந்து போய் கிடக்கிறது. உலகின் மிகக் குறைந்த இன்டர்நெட் பயன்பாடு கொண்ட நாடுகளின் பட்டியலில் எரித்ரியா முதலிடத்தில் உள்ளது. எரித்ரியாவில் இன்டர்நெட் என்பது ஒரு எட்டாக்கனி. அரசு அங்கே அத்தனை இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கட்டுப்பாடுகள்
அங்குள்ள தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் அனைத்தும் அரசு வசமே உள்ளன. தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது. வெகு சிலருக்கு மட்டுமே இன்டர்நெட் பயன்படுத்த அனுமதி தரப்பட்டு இருந்தாலும் கூட, அவர்கள் என்ன தேடுகிறார்கள், யாரோடு பேசுகிறார்கள் என்பதை அரசு கழுகுப் பார்வையுடன் கண்காணித்துக் கொண்டே இருக்கும்.
நமக்குக் கிடைக்கும் அதிவேக பிராட்பேண்ட் வசதிகள் எல்லாம் அந்த நாட்டில் கிடையாது.. மொபைல் டேட்டா என்பது கனவிலும் நினைக்க முடியாத ஒன்று.. ஒரு சில முக்கிய நகரங்களில் மட்டும் ஆங்காங்கே இன்டர்நெட் கஃபேகள் இருக்கும். ஆனால், அங்கேயும் வேகம் என்பது ஆமை வேகத்தை விடக் குறைவாகவே இருக்கும். அதற்குக் கொடுக்க வேண்டிய கட்டணமோ அங்கு ஒருவர் வாங்கும் மாத சம்பளத்திற்கு இணையானது. இதனால் பெரும்பாலான மக்கள் இன்னும் இணையத்தைப் பயன்படுத்தியது கூட இல்லையாம்.
வளர்ச்சி இல்லை
இன்டர்நெட் இல்லாதது அந்த நாட்டின் வளர்ச்சியைப் பாதாளத்திற்குத் தள்ளியுள்ளது என்பதே உண்மை.. உலகளாவிய ஆன்லைன் கல்வி வளங்கள் எரித்ரியா மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் நவீனக் கல்வி முறையிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சந்தையுடன் அந்த நாட்டுத் தொழிலதிபர்களால் தொடர்பு கொள்ள முடிவதில்லை. எல்லாவற்றையும் விட உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளக் கூட மக்கள் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது.
மோசமான பாதிப்பு
டிஜிட்டல் இடைவெளி அதாவது Digital Divide என்பது உலகளவில் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஒருபுறம் செயற்கை நுண்ணறிவு உலகையே மாற்றிக்கொண்டிருக்க, மறுபுறம் ஒரு நாடு அடிப்படை இணைய வசதி கூட இல்லாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. அரசியல் காரணங்களுக்காகவும், அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையுமே முடக்கி வைத்திருக்கிறது எரித்ரியா அரசு. ஏனென்றால் தொழில்நுட்பம் என்பது வசதி மட்டுமல்ல, அது ஒரு அடிப்படை உரிமை.












Click it and Unblock the Notifications