மிதக்கும் வீடு.. சென்னை மக்களே இதை நோட் பண்ணிக்கோங்க.. எதிர்காலத்துல யூஸ் ஆகும்!
மிதக்கும் வீடுகளை உருவாக்கிய ஜப்பான்.. நோட் பண்ணுங்கப்பா.. டிசம்பர்ல யூஸ் ஆகும்!
டோக்கியோ: வெள்ளம் வந்தால் அதில் மூழ்கிப் போகாமல், மிதக்கும் வகையிலான புதிய வீடுகளை உருவாக்கி அசத்தியுள்ளது ஜப்பான்.
மழை.. வெள்ளம்.. இதைப் பற்றி பெரிதாக சொல்லத் தேவையில்லை.. நம்மில் பலருக்கு நேரடியாகவே இதில் பாதிக்கப்பட்ட அனுபவம் இருக்கும். அதிலும் குறிப்பாக சென்னைவாசிகளுக்குச் சொல்லவே வேண்டாம். வடகிழக்கு பருவமழை வருகிறது என்றாலே, அடி வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விடும். கண்முன்னே 2015ம் ஆண்டு வெள்ளக் காட்சிகள் வந்து போகும்.
ஆனால் இனி வரும் தலைமுறைகள் வெள்ளத்தைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை எனும் அளவிற்கு புதிய கண்டுபிடிப்பு ஒன்றை ஜப்பானிய ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜப்பான் ஆராய்ச்சி
இந்தியா என்றில்லை உலகின் பல நாடுகள் ஆண்டுதோறும் மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகின்றன. ஜப்பானும் அப்படிப்பட்ட நாடுகளில் ஒன்றுதான். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், பெருந்துயர்களைச் சந்தித்தது ஜப்பான். வெள்ளத்தால் அங்கு ஆண்டுதோறும் மக்கள் பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகின்றனர். எனவே, மக்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற அந்நாடு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மிதக்கும் புதிய வீடுகள்
அதில் ஒன்றுதான் வெள்ளம் வந்தால் மிதக்கும் வகையிலான வீடுகளை உருவாக்குவது. ஜப்பானிய வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனமான 'இச்சிஜோ கோமுடென்' (Ichijo Komuten), நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மிதக்கும் வகையிலான வீடுகளை உருவாக்கியுள்ளது. இந்த வீடுகள் நீர் புகா வண்ணம் வடிவமைக்கப்படுகின்றன. எனவே மழை நீர் வீட்டுக்குள் புகுந்து விடும் எனவும் பயப்படத் தேவையில்லை.

வெள்ளம் வந்தால்...
வெள்ளம் இல்லாத காலங்களில் தரையில், மற்ற சாதாரண வீடுகள் போல்தான் இவையும் இருக்குமாம். வெள்ளம் வரும் காலங்களில் தானாகவே அதில் மிதக்கத் துவங்கி விடுமாம். நீரில் மிதக்கிறது என்றால், அப்போது லேசாக அட்டை போன்ற பொருட்களால் இந்த வீடு உருவாக்கப்படுகிறதா என்றால், அதுதான் இல்லை. கனமான கம்பிகளால் தான் இந்த வீட்டையும் உருவாக்குகின்றனர்.

சிறப்பு ஏற்பாடு
சரி, வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய் விடுமா இந்த வீடுகள் என்றால், அதுவும் இல்லை. ஏனென்றால், இந்த வீடுகள் கடினமான இரும்பு கம்பிகளால் இந்த வீடு தரையுடன் பொருத்தப்பட்டிருக்கும் என்கிறது அதன் தயாரிப்பு நிறுவனம். கூடவே, வெள்ளத்தால் மின் பாதிப்புகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக, சில சிறப்பு ஏற்பாடுகளையும் இந்த வீடுகளில் செய்துள்ளனர். அங்குள்ள மின்கம்பிகள் அனைத்தும் மேல்நோக்கி பொருத்தப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 15 அடி
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வீட்டை சுற்றி தண்ணீர் நிரம்பத் துவங்கியதும், தரையில் இருந்து மேலெழும்பி இந்த வீடுகள் மிதக்க ஆரம்பித்து விடும். ஆனால் அவை வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்படாமல் இருக்க, தடிமனான கேபிள்களால் அவை தரையுடன் இணைக்கப்பட்டிருக்கும். எனவே, வெள்ளம் ஏற்படும்போது மேலே மிதக்கும் வீடு, வெள்ளம் வடிந்ததும் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடும். தரையில் இருந்து 5 மீட்டர், அதாவது 15 அடி வரையிலும் இந்த வீடு மேலே எழும்பும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரல்
வருங்காலத்தில் இந்த வீடுகள் அதிகம் கட்டப்படும் சூழலில், வெள்ளப் பயம் இன்றி மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்கிறார்கள் ஜப்பானிய வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள். கடந்த வாரம் இந்த மிதக்கும் வீட்டின் வீடியோ அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமூகவலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி விட்டது. விரைவில் இந்த வகை வீடுகள் ஜப்பானில் பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications