இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தியுங்கள் - பிரபல கால்பந்து வீரர் மெசுத் ஓசில்
அன்காரா: மனித உரிமைகள் மீறப்படும் இந்தியாவில் வாழும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்காக பிரார்த்தியுங்கள் என ஜெர்மனி முன்னாள் கால்பந்து வீரர் மெசுத் ஓசில் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் சாதி, மத வெறுப்பு மோதல்களுக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மனித உரிமைகள் ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
கர்நாடகா ஹிஜாப் பிரச்சனை, ராமநவமி கலவரங்கள், டெல்லி ஜஹாங்கிர்புரி வீடுகள் இடிப்பு என அடுத்தடுத்து இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறி அமைதியிழக்க செய்கின்றன.

அமெரிக்க அரசு நிறுவனம், எம்.பி. கண்டனம்
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அமெரிக்க அரசு நிறுவனமான மத சுதந்திரங்களுக்கான அமைப்பு கண்டனம் தெரிவித்து இருந்தது. அதேபோல் அமெரிக்காவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. இல்ஹான் உமர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிட்டு இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மதவாத வன்முறைகள் குறித்து அமெரிக்க அரசு பேச வேண்டும் என வலியுறுத்தினார்.

இனப்படுகொலை அபாயம்
மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச ஆய்வுகளை நடத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஆம்னெஸ்டி இன்டெர்நேசனலும் தனது கவலையை பதிவு செய்திருந்தது. உலகளவில் நடைபெறும் இனப்படுகொலைகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவை சேர்ந்த ஜெனோசைட் வாட்ச் என்ற நிறுவனம் இனப்படுகொலைகள் நடப்பதற்கான 10 கட்டங்களில் 8 கட்டங்களை இந்தியா தாண்டிவிட்டதாக தெரிவித்து உள்ளது. இந்தியாவில் அரங்கேறி வரும் வகுப்புவாத வன்முறைகள் மற்றும் கவலைகள் சர்வதேச அளவில் தற்போது கவனத்தை ஈர்க்கத் தொடங்கி இருக்கின்றன.

இந்திய நிலை குறித்து மெசுல் ஓசில் கவலை பதிவு
இந்த நிலையில் ஜெர்மனி அணியின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரரான மெசுத் ஓசில் ட்விட்டரில் தனது கவலையை பதிவு செய்திருக்கிறார். அவர் தெரிவித்து இருப்பதாவது, "இந்தியாவில் உள்ள நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக லைலத்துல் கத்ர் புனித இரவில் பிரார்த்தனை செய்வோம். இந்த வெட்கக்கேடான சூழ்நிலை தொடர்பாக விழிப்புணர்வை பரப்புவோம்! உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று அழைக்கப்படும் நாட்டில் மனித உரிமைகளுக்கு என்ன நடக்கிறது? அமைதியை தகர்ப்போம்." எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

மெசுத் ஓசில்
துருக்கியை பூர்வீகமாக கொண்ட மெசுத் ஓசில், ஜெர்மனி சர்வதேச கால்பந்து அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வந்தார். கால்பந்தில் பல்வேறு சாதனைகளை படைத்த அவர் உயரிய விருதான கோல்டன் குளோப் ஷூ விருதுக்காவும் பரிந்துரைக்கப்பட்டார். ரியல் மேட்ரிட், அர்சனல் உள்ளிட்ட புகழ்பெற்ற கிளப் அணிகளுக்காக விளையாடிய அவர், துருக்கி அதிபர் எர்டோகானை சந்தித்தித்தற்காக ஜெர்மனியில் அணியில் ஓரம்கட்டப்பார். சீனாவில் உய்கூர் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்து பேசியதற்காக அர்செனல் அணியிலும் சேர்க்கப்படாத அவர், தொடர்ந்து மனித உரிமைகளுக்காக சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகிறார். தற்போது துருக்கியை சேர்ந்த ஒரு கிளப் அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.












Click it and Unblock the Notifications