"இதயம் நொறுங்கிவிட்டது".. வங்கதேச இந்துக்களுக்காக குரல் தந்த கிரிக்கெட் வீரர்.. துணிச்சலான பேச்சு!
டாக்கா: வங்கதேசத்தில் நடந்து வந்த மத ரீதியான கலவரங்களுக்கு எதிராக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்வதேச மேடையில் குரல் கொடுத்துள்ளார். யாருமே எதிர்பார்க்காத வகையில் மாஸ்ரப் பின் மோர்ட்டாசா திடீரென வங்கதேச இந்துக்கள் குறித்து பேசியது பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.
Recommended Video
ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை டி 20 தகுதி சுற்று ஆட்டம்... விறுவிறுப்பாக ஆட்டம் முடிந்துவிட்டது.. வங்கதேசம் படுதோல்வி அடைந்துவிட்டது. முதலில் இறங்கிய ஸ்காட்லாந்து அணி 140 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய வங்கதேசமோ 20 ஓவரில் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இன்னும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் நாக் அவுட் என்ற நிலை. இப்படி ஒரு சமயத்தில் வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் சோஷியல் மீடியால் போட்ட போஸ்ட்தான் பலரின் மனதை கவர்ந்துள்ளது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு விடுத்த எச்சரிக்கை - பின்னணி என்ன?
வங்கதேச முன்னாள் கேப்டன்
வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் மாஸ்ரப் பின் மோர்ட்டாசா இந்த போட்டியின் தோல்விக்கு பின் வங்கதேச அணி குறித்து பேசுவார், வீரர்களின் ஆட்டம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ தனது சமூக வலைதள போஸ்டில், நாங்கள் நேற்று இரண்டு தோல்விகளை சந்தித்துவிட்டோம். ஒரு தோல்வி எங்கள் வங்கதேச அணியின் கிரிக்கெட் தோல்வி.
தோல்வி
அது என்னை காயப்படுத்தியது. இன்னொரு தோல்வி என்னுடைய நாட்டில் நடந்த சம்பவம். என் மொத்த நாட்டிற்குமான தோல்வி அது. அந்த தோல்வி என்னுடைய இதயத்தையே நொறுக்கிவிட்டது, என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான கலவரத்தை குறிப்பிட்டு இப்படி கருத்து தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் துர்கா பூஜை நாட்களுக்கு முன்பாகவும், பின்பாகவும் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டது.
கலவரம்
பொது இடங்களில் இந்து சிலைகளை வைத்து வழிபடவும், துர்கா பூஜை கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் முஸ்லீம்கள் இந்துக்கள் இடையே கலவரம் ஏற்பட்டது. அதிலும் குமிலா உள்ளிட்ட பகுதிகளில் மிகப்பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது. சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்ட நிலையில், பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. பல இடங்களில் இந்து கடவுள் சிலைகள் அடித்து உடைக்கப்பட்டது.
பாரா மிலிட்டரி
இதனால் ரஞ்சப்பூர், குமிலா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாரா மிலிட்டரி படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இங்கு இந்துக்கள் தாக்கப்பட்டு வரும் சம்பவம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவும், இந்து சிறுபான்மையினர் மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட நேரத்தில்தான் கலவர புகைப்படங்களை வெளியிட்டு வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் மாஸ்ரப் பின் மோர்ட்டாசா இந்த போஸ்டை செய்துள்ளார்.
போஸ்ட்
இந்துக்களின் பாதுகாப்பு குறித்தும், ஒற்றுமை குறித்தும் பேசி உள்ளார். தனது நாட்டின் மத சிறுபான்மையினர் தாக்கப்படுவதை எதிர்த்து ஒரு கிரிக்கெட் வீரராக துணிச்சலாக பேசி உள்ளார். நாட்டில் பெரும்பான்மை இஸ்லாமியர்கள், அவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டாம், அரசு நம் மீது நடவடிக்கை எடுக்கும் என்றெல்லாம் அஞ்சாமல் மாஸ்ரப் பின் மோர்ட்டாசா துணிச்சலாக பேசி உள்ளார். அவரின் இந்த துணிச்சல் இந்தியாவில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
சமூக பிரச்சனை
சமூக பிரச்சனைகளில் இப்படித்தான் துணிச்சலாக குரல் கொடுக்க வேண்டும். எதற்கும் அஞ்சாமல் பேச வேண்டும் என்று மாஸ்ரப் பின் மோர்ட்டாசாவை பாராட்டி பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மாஸ்ரப் பின் மோர்ட்டாசா கிரிக்கெட் வீரர் என்பதையம் தாண்டி அவர் அந்நாட்டு நாடாளுமன்ற எம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.