இத்தனைக்கும் ஒரே கட்சிதான்.. ட்ரம்புக்கு வாக்களிக்காத முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்!
வாஷிங்டன்: உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் 45வது அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கிய வாக்குப்பதிவு, இன்று காலை 10.30 மணிவரை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இத்தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபரான ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் அவரது மனைவி லவுரா ஆகியோர் வாக்களித்தனர். ஆனால், டொனால்ட் டிரம்புக்கு அவர்கள் வாக்களிக்கவில்லை என அவரது செய்தித்தொடர்பாளர் பின்னர் அறிவித்தார்.
புஷ், எதிர்க்கட்சியை சேர்ந்த ஹிலாரிக்கு வாக்களிக்க உள்ளதாக தகவல் பரவியிருந்த நிலையில் அதையும் செய்தி தொடர்பாளர் மறுத்தார். அவர் இரு வேட்பாளர்களுக்குமே வாக்களிக்கவில்லை என்றும், பிற பதவிகளுக்கான போட்டியாளர்களுக்கு வாக்களித்து தம்பதிகள் திரும்பியதாகவும் செய்தித்தொடர்பாளர் கூறினார்.