வெளிநாடுகளின் நிலக்கரி மூலமான அனல் மின் நிலையங்களுக்கான நிதி உதவியை நிறுத்த ஜி20 உச்சி மாநாடு முடிவு
ரோம்: வெளிநாடுகளின் நிலக்கரி மூலமாக மின் உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையங்களுக்கான நிதி உதவியை 2021-ம் ஆண்டுக்குள் நிறுத்த ஜி20 உச்சி மாநாடு முடிவு செய்துள்ளது. இருப்பினும் ஜி20 நாடுகள் தங்களது உள்நாட்டில் நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாதது இந்தியாவுக்கு சாதகமானதாகவே பார்க்கப்படுகிறது.
ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் 16-வது 2 நாள் உச்சி மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று நிறைவடைந்தது. இம்மாநாட்டின் நிறைவாக வெளியிடப்பட்ட ரோம் மாநாட்டு பிரகடன கூட்டறிக்கையானது கார்பன் சமநிலை, நிலக்கரி பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை விவரித்துள்ளது.

அனல்மின்நிலையங்களுக்கான நிதி உதவி கட்
குறிப்பாக வெளிநாடுகளில் நிலக்கரி மூலமாக மின் உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையங்களுக்கான நிதி உதவியை இந்த ஆண்டுக்குள் நிறுத்த ஜி20 மாநாடு தீர்மானித்துள்ளது. அதே நேரத்தில் உள்நாடுகளில் நிலக்கரி எடுத்து அதன் மூலமாக மின் உற்பத்தி செய்யப்படும் அனல் மின் நிலையங்களின் செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இலக்குகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை
சர்வதேச நாடுகளில் இந்தியாவும் சீனாவும்தான் நிலக்கரி மூலமாக அனல் மின் உற்பத்தியை அதிகம் சார்ந்திருக்கின்றன. இதனால் ஜி20 நாடுகளின் 16-வது உச்சி மாநாட்டு முடிவுகள் இந்தியா, சீனாவுக்கு பாதகமானவை இல்லை என்றே பார்க்கப்படுகிறது. பிற நாடுகளைப் போல மரபுசாரா எரிசக்தி துறைக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களை மாற்றிக் கொள்வதற்கு கால அவகாசத்தை ஜி20 மாநாடு வழங்கியிருப்பதாகவும் கருதப்படுகிறது.

கொரோனா தடுப்பூசிகளுக்கு விரைவாக அனுமதி
இதேபோல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஜி20 உச்சி மாநாட்டின் அறிக்கை விவரிக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலக அளவிலான பொதுநலன் நடவடிக்கையாக ஜி20 மாநாடு தீர்மானித்திருக்கிறது. கொரோனா தடுப்பூசிகளுக்கான அனுமதியை உலக சுகாதார நிறுவனம் விரைந்து வழங்கும் வகையில் அதன் கட்டமைப்பை வலுப்படுத்தவும் ஜி20 நாடுகள் தீர்மானித்திருக்கின்றன.

பருவநிலை மாற்ற பேரழிவு தடுப்பு
மேலும் பருவநிலை பேரழிவைத் தடுக்கும் வகையில் 2050-க்குள் ஜீரோ கார்பன் உமிழ்வுநிலையை அடைவது எனவும் ஜி20 மாநாட்டின் ரோம் பிரகடனம் இலக்கு நிர்ணயித்திருக்கிறது. சர்வதேச சராசரி வெப்ப நிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்கு கீழே கொண்டு செல்வதற்காக அனைத்து நாடுகளும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்கிறது இந்த ரோம் பிரகடனம்.












Click it and Unblock the Notifications