இலங்கைக்கு எதிரான ஐ.நா. விசாரணை குழுவிலிருந்து 2 பேர் நீக்கம்!
ஜெனிவா: இலங்கைக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வரும் 10ஆம் தேதி நியமிக்க உள்ள விசாரணைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த இரண்டு பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு காரணமாகவே இந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரிகளான ஜெப்ரி ரொபர்ட்சன், டெனிஸ் ஹெலிடே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் புலம்பெயர் புலிகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என தெரியவந்ததை அடுத்தே இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விசாரணைக் குழுவின் தலைவராக ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அனானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் உயிரிழந்த புலிகளின் தலைவர் ஒருவருக்காக இரங்கல் செய்தியை வெளியிட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
கோபி அனான் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யனின் மறைவுக்கு இரங்கல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா மனித உரிமை பேரவையின் 26வது மனித உரிமை கூட்டத் தொடர் வரும் 10 ஆம் தேதி தொடங்குவதுடன் இலங்கை சார்பில் ஜெனிவாவுக்கான நிரந்த பிரதிநிதி உள்ளிட்ட குழுவினர் அதில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனிடையே போர் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட உள்ள குழுவிற்கு சாட்சியங்களை வழங்க புலம்பெயர் புலிகள் 21 சாட்சியாளர்களை தயார்ப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications