மேக்கப்போடு உச்சா போன நடிகர்... ‘பூதம்’ என நினைத்து தவறாக எடுக்கப்பட்ட போட்டோவால் பரபரப்பு!
பீஜிங்: சீனாவில் மலையொன்றில் பூதத்தை நேரில் கண்டு புகைப்படம் எடுத்ததாக இணையத்தில் இளைஞர் ஒருவர் வெளியிட்ட புகைப்படங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சீனாவை சேர்ந்த பெயர் வெளியிடாத நபர் ஒருவர் தனது நண்பர்களுடன் பெய்ஜிங்கின் வடக்கே ஹுவாரியவ் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு, ஒரு வினோத உருவம் ஒன்றைக் கண்டுள்ளார்.
தலையில் முடி இல்லாத, மாமிச நிறத்திலான மற்றும் நீண்ட காதுகள் கொண்ட அந்த உருவத்தை புகைப்படங்களாக எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டார் அந்த இளைஞர். மேலும், தான் கண்டது பூதம் தான் என அவர் தெரிவித்தார்.
கொல்லம் கேரக்டர்...
இளைஞர் வெளியிட்ட புகைப்படத்தில் பதிவாகியிருந்த உருவம் பார்ப்பதற்கு லார்டு ஆப் தி ரிங்ஸ் படத்தில் வரும் கொல்லம் என்ற கதாபாத்திரத்தை போன்று இருந்தது. மேலும், அந்த உருவம் தனது இடுப்பில் இலைகளால் ஆன ஆடையை அணிந்து இருந்தது.
சமூக வலைதளப் பக்கம்...
இந்த வினோத உருவத்தைப் பார்த்த அந்த இளைஞர் உடனடியாக சில புகைப்படங்களை எடுத்துள்ளார். அதனை தனது சமூக வலைதளப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் அந்த இளைஞர்.
புகைப்பட ஆதாரம்...
இது குறித்து அந்த இளைஞர் கூறுகையில், நான் காலை கடன் கழிப்பதற்காக சற்று தொலைவான பகுதிக்கு சென்றேன். திடீரென ஒரு உருவத்தை பார்த்தேன். அதனை சில புகைப்படங்கள் எடுத்தேன். ஆனால், எனக்கு இப்பொழுது பயமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
பூதம் சர்ச்சை...
இளைஞரின் புகைப்படத்தைப் பார்த்த அவரது நட்பு வட்டத்தில் இருந்தவர்கள் சிலர் அது உண்மையிலேயே பூதம் தான் என நம்பினர். மேலும், சிலர் இல்லையில்லை அது சித்தரிக்கப்பட்டது, பொய், புரளி என வாதிட்டனர். இப்படியாக, இந்தத் தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்ப இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பதில் கிடைத்துள்ளது.
விஞ்ஞானப்படம்..
அதாவது விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படத்தின் நடிகர் ஒருவர் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அதாவது, அந்தப் புகைப்படத்தில் இருப்பது அவர் தானாம்.
இயற்கை உபாதை...
சம்பந்தப்பட்ட மலையில் அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்ததாம். படப்பிடிப்பின் இடையே இயற்கை உபாதையைக் கழிக்க மறைவிடத்தில் ஒதுக்கிய அவரைத் தான் பூதம் எனக் கருதி இளைஞர் புகைப்படம் எடுத்துள்ளார்.
குழப்பம் நீங்கியது...
இணையத்தில் அவரது புகைப்படத்தை பூதம் எனக் கூறி அந்த இளைஞர் வெளியிட்டதால் முதலில் அமைதியாக இருந்ததாகவும், பின்னர் குழப்பத்தைத் தவிர்க்க இந்த விளக்கத்தை அளித்துள்ளதாகவும் அந்த நடிகர் தெரிவித்துள்ளார்.