மாலத்தீவு டூ சிங்கப்பூர் டூ துபாய்-நாடு விட்டு நாடு தப்பி ஓடிக் கொண்டே இருக்கும் கோத்தபாய ராஜபக்சே!
மாலே: மாலத்தீவில் அகதியாக தஞ்சம் அடைந்திருந்த கோத்தபாய ராஜபக்சே, அங்கிருந்து சிங்கப்பூருக்கு தப்பி ஓடிவிட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
Recommended Video
இலங்கையில் மக்கள் கிளர்ச்சியால் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன் என அறிவித்தார் கோத்தபாய ராஜபக்சே. ஆனால் இதுவரை கோத்தபாய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதம் வெளியாகவில்லை.
இந்த நிலையில்தான் இன்று அதிகாலை திடீரென இலங்கையை விட்டு கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடினார். இலங்கை விமானப் படைக்கு சொந்தமான விமானத்தில் மாலத்தீவுக்கு கோத்தபாய ராஜபக்சே தப்பினார். அவருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் உதவியாக இருந்தார். கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடியதை பிரதமர் ரணில் அலுவலகம், இலங்கை விமானப் படை இரண்டுமே உறுதி செய்து அறிவித்தன.
மாலத்தீவில் அந்நாட்டு மாஜி அதிபரும் சபாநாயகருமான நஷீத் பாதுகாப்பில்தான் கோத்தபாய தங்கி இருந்தார். ஆனால் கோத்தபாயவுக்கு அகதியாக அடைக்கலம் தரக் கூடாது என மாலத்தீவு மக்களும் போராட்டத்தில் குதித்தனர். இலங்கையிலும் கோத்தபாய ராஜபக்சேவை தப்பி ஓடவிட்டதற்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. கொழும்பில் பிரதமர் அலுவலகம் முன்பாக இன்று காலை பிரம்மாண்டமான போராட்டம் நடைபெற்றது. இதனை ஒடுக்க ராணுவம் களமிறக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. ராணுவம் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தியது.
இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே, இலங்கையில் அவசரநிலையை பிரகடனம் செய்தார். மேலும் கோத்தபாய நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில் இடைக்கால ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மாலத்தீவில் பதுங்கி கிடந்த கோத்தபாய ராஜபக்சே, தற்போது சிங்கப்பூருக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து துபாய் செல்ல கோத்தபாய ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துபாயில் அரசியல் அகதியாக மனைவியுடன் கோத்தபாய ராஜபக்சே தஞ்சமடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
துபாயில் தஞ்சமடைந்த பின்னரே தமது அதிகாரப்பூர்வமான ராஜினாமா அறிவிப்பை கோத்தபாய வெளியிட திட்டமிட்டுள்ளாராம். ஜனாதிபதி பதவி வகிக்காமல் துபாயில் தஞ்சமடைவது சிக்கல் என்பதால் கோத்தபாய இப்படி திட்டமிட்டிருக்கிறார் என்கின்றனர் கொழும்பு பத்திரிகையாளர்கள்.