அடுத்து இஸ்ரேல்-லெபனான் இடையே தொடங்கும் போர்? எல்லையில் கடும் மோதல்! இந்த பக்கம் ஹமாஸ் வேற இருக்கே
டெல் அவிவ்: ஒரு பக்கம் இஸ்ரேல்- ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் தொடரும் நிலையில், திடீரென லெபனானும் இஸ்ரேலை நோக்கித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹமாஸ் படை யாருமே எதிர்பார்க்காத வகையில் தாக்குதலை நடத்தினர். மிகக் குறுகிய நேரத்தில் அதிகப்படியான ஏவுகணைகளை வீசினர். மேலும் பாராசூட், ஜீப் மூலமாகவும் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த ஹமாஸ் படை சரமாரியாகத் தாக்குதலை நடத்தினர்.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேலும் இறங்கியுள்ளது. காசா பகுதியை நோக்கி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், தாக்குதலைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ள இஸ்ரேல், காசா பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பெரும் பரபரப்பை அங்கே ஏற்படுத்தியுள்ளது.
லெபனான்: இது ஒரு பக்கம் இருக்க மற்றொருபுறம் இஸ்ரேல்- லெபனான் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. சில நாட்களாகவே இஸ்ரேல் படைகளுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் தொடரும் நிலையில், இந்த மோதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா படைகள் முதலில் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் இஸ்ரேல் போர் எங்கு மேலும் விரிவடையுமோ என்று அஞ்சப்படுகிறது.
எல்லையில் மோதல்: அதாவது முதலில் ஹிஸ்புல்லா படைகள் இஸ்ரேல் எல்லையில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எல்லையில் மைனர் சேதாரம் ஏற்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள், பீரங்கிகள் லெபனானில் உள்ள பல பகுதிகளைத் தாக்கியது. இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலை பொறுத்தவரை அது சுற்றியுள்ள அனைத்து அண்டை நாடுகளுடனும் பிரச்சினையைக் கொண்டுள்ளது. இதற்குப் பாலஸ்தீன விவகாரம் தொடங்கிப் பல காரணங்கள் இருக்கிறது. அதன்படிதான் லெபனான் உடனும் அதற்குப் பல ஆண்டுகள் பகை இருக்கிறது. 1948இல் நடைபெற்ற இஸ்ரேல் அரபு போரில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை இருக்கிறது. அப்போது லெனான் அரபு நாடுகளுக்கு ஆதரவாகப் போரிட்டது.
இஸ்ரேல் லெபனான் போர்: அப்போது முதலே இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருக்கிறது. கடந்த காலங்களில் பல நேரங்களில் இஸ்ரேல்- லெபனான் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்களை எல்லாம் நடத்தியுள்ளது.. இதற்கிடையே லெபனான் நாட்டில் இருக்கும் ஹிஸ்புல்லா படையினர் தான் இப்போது இஸ்ரேலைத் தாக்கியுள்ளனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்துள்ளது.
ஏற்கனவே இஸ்ரேல் ஹமாஸ் படை யுத்தம் ஒரு வாரமாகத் தொடர்ந்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் தலா 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்போது இந்தச் சம்பவமும் நடந்துள்ளது எங்குப் போர் அந்த பிராந்தியம் முழுக்க பரவுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு பக்கங்களில் இருந்தும் தாக்குதல் வந்தால் அதைச் சமாளிப்பது இஸ்ரேலுக்கும் கடுமையாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications