லெபனான் எல்லையில் ஹெஸ்புல்லா இயக்கத்தின் ஏவுகணைத் தாக்குதலுக்கு 2 இஸ்ரேல் வீரர்கள் பலி!
பெய்ரூட்: இஸ்ரேல்- லெபனான் எல்லையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 2 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவின் கோலன் கெய்ட்ஸ் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. இதே பகுதியில் சில இடங்கள் ஹெபுல்லா தீவிரவாத இயக்கத்தினர் வசம் உள்ளது.
இந்த கோலன் கெய்ட்ஸ் பகுதியானது இஸ்ரேல், லெபனானுடன் எல்லைகளைக் கொண்டது. கோலன் கெய்ட்ஸ் பகுதியில் ஹெஸ்புல்லா இயக்க தீவிரவாதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் வான்படை அதிரடியாக நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியது.
இதில் ஹெஸ்புல்லா இயக்க தளபதிகள் 7 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் லெபனான் -சிரியா எல்லையில் இஸ்ரேல் ஆக்கிரமித்து இருக்கும் ஷெபா பகுதியில் சென்று கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டு ராணுவ வாகனங்கள் மீது ஹெஸ்புல்லா இயக்கத்தினர் ஏவுகணைகளைக் கொண்டு நேற்று தாக்குதல் நடத்தினர்.
இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேர் பலியாகினர். 7 வீரர்கள் படுகாயமடைந்தனர். ஹெஸ்புல்லா போராளிகளின் இந்த தாக்குதலுக்கு மூர்க்கத்தனமாக பதிலடி தரப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எச்சரித்துள்ளார்.
மேலும் ஹெஸ்புல்லா இயக்கத்தினரின் முகாம்களின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் ஆவேச தாக்குதல் நடத்தின. இதில் ஏற்பட்ட உயிரிழப்பு விவரங்கள் தெரியவில்லை.